ஏப்ரல் 22-ந் தேதி உலக புவி நாள் அல்லது சர்வதேச பூமி தினம்

சர்வதேச பூமி தினம்
ஒவ்வொரு சிறப்பு நாளுக்குப் பின்னும் ஏதோ ஒரு வரலாறு உண்டு. அதுபோலத்தான் உலக பூமி நாளுக்கும் ஒரு சோக வரலாறு உண்டு
பூமியின் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், புவி மாசடைவதைத் தடுக்கும் எண்ணத்துடனும், 1970-ம் ஆண்டு முதல், உலக நாடுகள் அனைத்திலும், ஏப்ரல் 22-ந் தேதியை 'உலக புவி தினம்' என்று கடைப்பிடித்து வருகிறோம். அதே சமயம் ஒவ்வொரு சிறப்பு நாளுக்குப் பின்னும் ஏதோ ஒரு வரலாறு உண்டு. அதுபோலத்தான் உலக பூமி நாளுக்கும் ஒரு சோக வரலாறு உண்டு. 1969-ம் ஆண்டு, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், மிகப்பெரிய எண்ணெய்க் கசிவு விபத்து நடந்தது.
தொழிற்சாலைகள் பலவற்றால் பூமி மாசுபடுவது அப்போது அதிகரித்தது. இதையெல்லாம் கண்டு மனம் வெந்த சில போராட்டக்காரர்கள், 1970-ம் ஆண்டு ஏப்ரல் 20-ம் தேதி, 2 கோடி பேர் கலந்துகொண்ட மாபெரும் பேரணியை நடத்தினார்கள். மனிதர்கள், பூமியை எவ்வளவு சேதப்படுத்திவருகிறார்கள் என்பதை அந்த மக்கள் கூட்டம் எடுத்துச்சொல்லியது. `கேலார்டு நெல்சன்' என்பவர்தான் அந்தப் புரட்சிப் பேரணிக்குப் பின்னால் இருந்தவர்களில் முக்கியமானவர். அதைத் தொடர்ந்து, ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 22-ம் தேதியைப் புவி தினமாக அமெரிக்கர்கள் கொண்டாடி வந்தார்கள்.
1990-ம் ஆண்டில், ஐ.நா சபையால் 'புவி தினம்' அங்கீகரிக்கப்பட்டு, உலகம் முழுவதும் அன்று முதல் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. காடுகளை அழித்து வீடுகளை உருவாக்கி நாகரிகம் வளர்த்த நாம், இன்று மீண்டும் மரங்களை வளர்த்தால்தான் மகிழ்ச்சி நீடிக்கும் என உணரத் தொடங்கி இருக்கிறோம். காடுகள், மலைகள், பாலைவனங்கள், ஆறுகள், சமவெளிகள், மிகப்பெரிய நிலப்பரப்பு என அனைத்தும் தன்னுள் அடக்கி உயிரின வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியமான பொருள்களைத் தருவது நம் பூமி.
மனித தேவையின் அத்தியாவசியம் மற்றும் அதிகப்படியான பொருள்களையும், வளங்களையும் வழங்கி இன்றைய நிலைமையில் எதுவும் இல்லாமல் இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் எங்கு பார்த்தாலும் இயற்கை பேரிடர்கள். இதற்குக் காரணம் புவி வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் மாசுபாடு, மக்கள் தொகை பெருக்கம், தொழில்மயமாதல் எனக் காரணங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.
நம்மை மீறி ஒரு குப்பையைக் கீழே போட்டாலும்கூட, அது பூமிக்கு செய்யும் தீமைதான். இன்று பூமி இந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டு இருப்பதற்கு நாமும், நம் வாழ்க்கை முறையும்தான் காரணம். அறிவியல் வேண்டுமானால் வளர்ந்திருக்கலாம், ஆனால் கண்டுபிடிப்புகள் எப்போது வேண்டுமானாலும் அழிவைத் தரலாம்.
`பூமிக்கு எதிராக, அதன் வளங்களை அழிக்கும் அனைத்து நடவடிக்கைகளும் தனி நபரிடமிருந்துதான் தொடங்கியிருக்கின்றன. அப்படி என்றால், இந்தப் பூமியைக் காப்பாற்றும் நடவடிக்கையும் தனி நபரிடமிருந்துதான் தொடங்க வேண்டும். நாம் மாறினால், நாடு மாறும். நாடுகள் மாறினால், பூமி வாழும்'
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu