உக்ரைனில் தமிழகத்தை சேர்ந்த 1000 பேர் தவிப்பு

உக்ரைனில் தமிழகத்தை சேர்ந்த 1000 பேர் தவிப்பு
X

உக்ரைன் எல்கையில் குவிக்கப்பட்டுள்ள ரஷ்ய போர் விமானங்களின் செயற்கைகோள் புகைப்படம்.

உக்ரைனில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேரும்படி இந்திய தூதரகம் மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுக்க தயார் நிலையில் உள்ளது. இதனால் அந்நாட்டில் இருக்கும் வெளிநாட்டினரை அந்த நாடுகள் தங்கள் நாடுகளுக்கு திரும்ப உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ரஷ்யா உக்ரைன் எல்கையில் 32 ஜெட் விமானங்கள், 50 ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை குவித்து வைத்துள்ளது. மேலும் எல்கையில் போர் ஒத்திகையையும் நடத்தி வருகிறது. இதனால் அந்நாட்டில் உள்ள வெளிநாட்டினர் தற்போது தங்கள் நாடுகளுக்கு அவசர அவசரமாக திரும்புகின்றனர். இதேபோல் அங்கு வசிக்கும் இந்தியர்கள் உடனடியாக வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது.

உக்ரைன் நாட்டில் இந்தியாவை சேர்ந்த 20 ஆயிரம் பேர் இருப்பதாகவும், அதில் தமிழகத்தை சேர்ந்த 1,000 பேர் தவிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைனில் இருக்கும் தமிழர்களில் பலர் மருத்துவம், என்ஜினீயரிங் படிப்பதற்காக சென்ற மாணவர்கள் மற்றும் சிலர் வேலைக்காகவும் சென்றவர்கள் ஆவர்.

தமிழகத்தை சேர்ந்தவர்கள் பத்திரமாக தாயகம் திரும்ப தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி உக்ரைனில் உள்ள இந்திய தூதரகத்தினருக்கு மாநிலங்களவை எம்.பி.யும், தி.மு.க. அயலக அணியின் இணை செயலாளருமான புதுக்கோட்டை அப்துல்லா கடிதம் அனுப்பி உள்ளதோடு மேற்கண்ட தகவல்களையும் அவர் தெரிவித்தார்.

Tags

Next Story