சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக தலைவாசல் தம்மம்பட்டி பகுதியில் கனமழை பெய்தது. இந்த மழையால் அந்த பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
இன்று அதிகாலை முதல் மாவட்டம் முழுவதும் பரவலாக கன மழை பெய்தது. இந்த தொடர் மழையால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கன மழை பெய்ததால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என்று கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டார்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக தலைவாசலில் 13 மி.மி. பதிவாகியுள்ளது. வீரகனூரில் 9, தம்மம்பட்டி 7, கெங்கவள்ளி 6, பெத்தநாயக்கன்பாளையம் 4.5, சேலம் 4 ஆத்தூர் 4, ஏற்காடு 2.6, கரிய கோவில் 1 மி.மீட்டர் என மாவட்டம் முழுவதும் 51.10 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இதே போல நாமக்கல் மாவட்டத்திலும் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக மோகனூரில் 32 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. நாமக்கல்லில் 2, பரமத்திவேலூரில் 3, ராசிபுரம் 1.2, சேந்தமங்கலம் 3.2, திருச்செங்கோடு 15, கலெக்டர் அலுவலகப் பகுதி, கொல்லிமலை 4 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 61.4. மி.மீட்டர் மழை பெய்துள்ளது.
இதை தொடர்ந்து இன்று காலையும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து கொண்டிருந்தது. இதையடுத்து மாணவர்கள் நலம் கருதி நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் உத்தரவிட்டுள்ளார்.