மாற்றுத்திறனாளிகள் நடுநிலை பள்ளி உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த கோரிக்கை

பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்கள் படிப்பை தொடர உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த கோரிக்கை
சென்னை: சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பார்வை குறைபாடுடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என கோரி, அந்த பள்ளியில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்கள், அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் சேர்ந்து நேற்று சென்னை அடையாறில் உள்ள மாற்றுத்திறனாளி நலத்துறை இயக்குநர் லட்சுமியை சந்தித்து மனுவை வழங்கினர்.
இதுகுறித்து அப்பள்ளியின் ஆசிரியரான கருப்பையா கூறியதாவது: சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டையில் பார்வை குறைபாடுடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளி கடந்த 75 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு படித்து வருகின்றனர்.
பள்ளி துவங்கி பல ஆண்டுகள் கடந்தும், இதுவரை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படவில்லை. கடந்த பத்து ஆண்டுகளாக பலமுறை முயற்சி செய்தும் எதுவும் நிகழவில்லை. எட்டாம் வகுப்புக்குப் பிறகு மாணவர்கள் மேல்கல்விக்காக தஞ்சாவூர், சென்னை, திருச்சி போன்ற மாவட்டங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது. ஆனால், பெற்றோர் தூரம் என்பதையும், பாதுகாப்பை கருத்தில் கொண்டு அனுப்ப மறுப்பதால், மாணவர்கள் இடைநிற்றலுக்கு உள்ளாகிறார்கள்.
நடப்பு கல்வியாண்டில் 16 மாணவர்கள் எட்டாம் வகுப்பை முடித்துள்ளனர். இதில் ஐந்து மாணவர்களின் பெற்றோர், அவர்களை வெளி மாவட்டங்களுக்கு அனுப்ப மறுத்துள்ளனர். எனவே, மாணவர்கள் எதிர்கொள்ளும் இடைநிற்றலை தவிர்க்கும் வகையில், சேலம், புதுக்கோட்டை மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள மூன்று நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும் என அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம் என கூறினார்.
மாணவர்களில் ஒருவரான மணிவாசகம் கூறியதாவது: "நான் இக்கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு முடித்துள்ளேன். ஒன்பதாம் வகுப்பு படிக்க வெளி மாவட்டம் செல்லும்படி சொல்கின்றனர். ஆனால் என் பெற்றோர் அனுமதிக்க மறுக்கின்றனர். எனவே எனது படிப்பு அரசின் முடிவையே சார்ந்துள்ளது," என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu