சேலத்தில் கருக்கலைப்பில் ஈடுபட்ட நர்ஸ்களை போலீசார் கைது செய்தனர்

கருக்கலைப்பு சம்பவம்: தலைமறைவான நர்ஸின் உறவினர்களிடம் விசாரணை
சேலம் மாவட்டம் கருப்பூரில் சட்டவிரோதமாக கர்ப்பிணிகளுக்கு பாலினம் கண்டறிதல் மற்றும் கருக்கலைப்பு செய்து வந்த விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான வாழப்பாடியைச் சேர்ந்த நர்ஸ் கனகாவைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கடந்த ஏப்ரல் 4 அன்று, தர்மபுரி மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குநர் சாந்தி, சேலம் மாவட்ட சுகாதார அலுவலர்கள் சவுண்டம்மாள், யோகானந்த் மற்றும் மருத்துவக் குழுவினர் கிடைத்த தகவலின் அடிப்படையில் கோட்டகவுண்டம்பட்டி குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினர்.
சோதனையின்போது, அந்த இடத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு சட்டவிரோதமாக பாலினம் கண்டறிதல் மற்றும் கருக்கலைப்பு நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது. இந்த சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக தனியார் மருத்துவமனை நர்சுகளான சுகன்யா மற்றும் கலைவாணி ஆகியோரை கருப்பூர் காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் வாழப்பாடியைச் சேர்ந்த நர்ஸ் கனகா தலைமறைவாகி உள்ளார். அவர் சென்னையில் பதுங்கியிருப்பதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, கருப்பூர் காவல்துறையின் தனிப்படை அதிகாரிகள் கனகாவின் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னைக்குச் சென்றுள்ள காவல்துறை அதிகாரிகள் கனகாவைக் கைது செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். சட்டவிரோத கருக்கலைப்பு மற்றும் பாலினம் கண்டறியும் சோதனைகள் பெண் சிசுக்கொலைக்கு வழிவகுக்கும் என்பதால், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய அதிகாரிகள் தீவிரமாக முயன்று வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu