கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எதிர்ப்பு

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி டவுன் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான இடத்தை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் நாமக்கல் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
பொதுமக்கள் அளித்த மனுவில் குறிப்பிடப்பட்டதாவது, "எருமப்பட்டி பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவிருக்கிறது. ஆனால் அந்த இடத்தை சுற்றியுள்ள பகுதிகள் விவசாயத்திற்கு முக்கியமானவை. குறிப்பாக, 600 ஏக்கருக்கும் மேற்பட்ட நன்நிலங்களில் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் பட்சத்தில் இந்நிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது," என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த இடத்தைச் சுற்றி குடியிருப்புகள் உள்ளதால், கழிவுநீரால் நிலத்தடிநீர் மாசடையும் அபாயம் இருப்பதாகவும், இது குடிநீருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். இதே கோரிக்கையை 2024 பிப்ரவரி 19 மற்றும் ஜூன் 28 ஆகிய தினங்களில் கலெக்டர் மற்றும் டவுன் பஞ்சாயத்து அதிகாரிகளிடமும் மனுவாக தெரிவித்துள்ளனர்.
விவசாய நிலங்கள் பாதுகாக்கப்பட்டு, பொதுமக்களின் வாழ்க்கை தரம் கெடாத வகையில், திட்டத்திற்கான இடத்தை மாற்ற அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu