இடையப்பட்டியில் சக்தி மாரியம்மன் தேர் திருவிழா

இடையப்பட்டியில் சக்தி மாரியம்மன் தேர் திருவிழா
X
பெத்தநாயக்கன்பாளையம், இடையப்பட்டியில் மாயவ பெருமாள், மகா சக்தி மாரியம்மன் தேர் திருவிழா

மகா சக்தி மாரியம்மன் தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது

பெத்தநாயக்கன்பாளையம் அருகே இடையப்பட்டியில் அமைந்துள்ள மாயவ பெருமாள் மற்றும் மகா சக்தி மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. 7ம் தேதி, மாரியம்மன் கோவிலிலிருந்து மாயவ பெருமாள் கோவிலுக்குப் பொங்கல் கூடை எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. 8ம் தேதி பெருமாள் திருத்தேர் வில்வனூர் மற்றும் இடையப்பட்டி கிராமங்களில் வீதியுலா சென்றது.

அதனைத் தொடர்ந்து, சக்தி மாரியம்மனுக்காக சக்தி அழைத்தல், கம்பம் நடுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 13ம் தேதி தேவராட்டம் மற்றும் ஊரணி பொங்கல் விழா சிறப்பாக நடந்தது. நேற்று முன்தினம் மாரியம்மன் தேரில் ரதம் ஏறுதல், பொங்கல் வைத்தல், உருளுதண்டம் போடுதல், கிடா வெட்டுதல், அழகு குத்துதல், அக்னி கரகம், பூங்கரகம் அழைத்து வருதல், தெருக்கூத்து போன்ற பண்டிகை நிகழ்வுகள் நடைபெற்றன.

நேற்று மதியம் 1 மணிக்கு மகா சக்தி மாரியம்மன் தேர் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து, கோவில் முன் தேரை நிலை நிறுத்தினர்.

சங்ககிரி சித்திரை தேரோட்டம்

அதேபோல், சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோவிலில் சித்திரை தேரோட்டத்தின் 14வது நாளான நேற்று, ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் பெருமாள், கற்பக விருட்சம் அலங்காரத்தில் நகர வீதிகளில் உலா வந்தார். இந்த நிகழ்விலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

அலகு குத்தும் விழா – நடுவலூர்

கெங்கவல்லி அருகே உள்ள நடுவலூர் புத்து மாரியம்மன் கோவிலில், கடந்த 9ம் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றன. நேற்று நடைபெற்ற பொங்கல் வைபவத்தில், ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி, தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன்கள் செலுத்தினர். இதில் பலர் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Tags

Next Story