மெட்ரோ ரெயிலில் ரூ.100 டிக்கெட்டில் நாள் முழுவதும் பயணம் செய்யும் அசத்தல் திட்டம்

மெட்ரோ ரெயிலில் ரூ.100 டிக்கெட்டில்  நாள் முழுவதும் பயணம் செய்யும் அசத்தல் திட்டம்
X

மெட்ரோ ரெயில். கோப்பு படம்.

மெட்ரோ ரெயிலில் ரூ.100 டிக்கெட்டில் நாள் முழுவதும் பயணம் செய்யும் அசத்தல் திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சென்னை நகரில் பொதுமக்கள் பயணம் செய்ய நகர பஸ், மின்சார ரெயில், பறக்கும் ரெயில் என்று பொதுபோக்குவரத்துகள் உள்ளன.அப்படி இருந்தும் மக்கள் குறிப்பிட்ட இடத்திற்கு, குறித்த நேரத்தில் சென்றடைய கடும் அவதி படுகின்றனர். கடும் நெரிசலில் சிக்கி திணறிதான் அவர்கள் பயணம் செய்ய வேண்டிய இருக்கிறது. எந்த நெரிசலும் இல்லாமல், குளிர்சாதன வசதியுடன் மக்களின் சொகுசான பயணத்திற்கு மெட்ரோ ரெயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த முதலில் 2007ஆண்டு திட்டபணிகள் தொடங்கின. ஜனவரி 28, 2009 அன்று சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. சென்னை மெட்ரோ ரெயில் சேவை ஆலந்தூர் மற்றும் கோயம்பேடு ஸ்டேஷன்களுக்கு இடையே 4.5 கிலோமீட்டர் தூரம் முதலில் தொடங்கியது. ஜூன் 29, 2015 அன்று அன்றைய முதல்வர் மறைந்த ஜெயலலிதா இந்த ரெயில் சேவையை தொடங்கிவைத்தார்.பின்னர் இந்த திட்டம் விரிவு படுத்தப்பட்டு சென்னை எக்மோர், சென்ரல்ரெயில் நிலையங்கள், விமான நிலையம், வண்ணாரப்பேட்டை, அண்ணா சாலை என்று கூடுதல் இடங்களுக்கு இயக்கப்படுகிறது.

மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு தொடக்கத்தில் மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை.டிக்கெட் கட்டணம் அதிகம் என்பதால் அதில் பயணம் செய்ய மக்கள் தயங்கினார்கள். வெளி ஊர்களில் இருந்து சென்னைக்கு சுற்றுலா சென்றவர்கள் தான் அதிக அளவில் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தனர். அதனால் மக்களை கவர பல்வேறு சலுகை திட்டங்களை மெட்ரோ நிறுவனம் அறிவித்தது. இதன் காரணமாக படிப்படியாக மெட்ரோ ரெயிலில் கூட்டம் அதிகரித்தது. சென்னையில் இரண்டு வழித்தடங்களில் 55 கிலோமீட்டர் தூரத்துக்கு 42 மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில் இயக்கப்படுகின்றன. அலுவலகத்திற்கு செல்கிறவர்கள் அதிக அளவில் பயணம் செய்வதால் அலுவலக நேரமான காலை 8 மணி முதல் 11 மணி வரை 5 நிமிடத்துக்கு ஒரு ரெயிலும், மற்ற நேரங்களில் 10 நிமிடத்துக்கு ஒரு ரெயிலும் இயக்கப்படுகின்றன.

மெட்ரோ பயணிகளை கவரும் வகையில் ரூ.100 கட்டணத்தில் ஒருநாள் முழுவதும் விரும்பிய இடங்களுக்கு பயணம் செய்யும் பாஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தினசரி பாஸுக்கு மெட்ரோ ரெயில் பயணிகளிடத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் மெட்ரோ ரெயில் அதிகாரிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். எந்த மெட்ரோ ரெயில் நிலையத்தில் ஒருவர் பயணத்தைத் தொடங்கினாலும், ரூ.100 பயணக் கட்டணமும், பயண அட்டை கட்டணமாக 50-ம் செலுத்தி இந்த பாஸை பெறலாம். இந்த தினசரி பாஸை பயன்படுத்தி காலை 5 மணிமுதல் இரவு 11 மணி வரை எத்தனை முறை வேண்டுமானாலும், எந்த மெட்ரோ ரெயில் நிலையத்துக்கும் சென்று வரலாம்.

இந்த தினசரி பாஸை யார் வாங்கினார்களோ அவர்கள்தான் ரெயிலில் பயணம் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. அன்றைய தினம் நண்பர்கள், உறவினர்கள் என்று யார் வேண்டுமானாலும் இந்த தினசரி பாஸை பயன்படுத்தி பயணம் செய்யலாம். கடைசியில் எந்த மெட்ரோ நிலையத்தில் பயணத்தை முடித்து கொள்கிறார்களோ அங்கு இந்த தினசரி பாஸ் பயண அட்டையை கொடுத்து விட்டு ரூ.50 திரும்ப பெற்றுக்கொள்ளலாம். ஒருநாள் மட்டுமே இந்த பாஸ் செல்லும். இந்த அசத்தல் திட்டம் குறிப்பாக தனியார் நிறுவன ஊழியர்கள், கூரியர் நிறுவனத்தினர், மாணவர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் மெட்ரோ ரெயில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

Tags

Next Story
கடனை தவிர்க்க AI உங்களுக்குத் துணை!