திருவண்ணாமலை அருணாசலச்சேஸ்வரர் கோவிலில் பந்தக்கால் முகூர்த்தம்
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீப விழாவிற்காக பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.
HIGHLIGHTS

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மாவட்ட கலெக்டர் முருகேஷ் முன்னிலையில் பந்தகால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீப விழாவிற்காக பந்தக்கால் முகூர்த்தம் இன்று காலை நடைபெற்றது.
நீர், நெருப்பு, ஆகாயம், காற்று, நிலம் ஆகிய பஞ்சபூத ஸ்தலங்களில் நெருப்பு ஸ்தலமாக கருதப்படுவது திருவண்ணாமலை. இங்கு சிவனே மலையாக எழுந்து நிற்பதாக ஐதீகமாக நம்பப்படுகிறது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அன்றாடம் விசேஷம் நடைபெற்றாலும் கூட கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீபத்திருநாளும், அதையொட்டி 10ஆம் நாள் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்வும் தான் அனைத்திற்கும் சிகரம் வைத்தார் போல் இருக்கும். இந்த மகா தீப தரிசனத்தை காண்பதற்கே லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவதுண்டு.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் மாதம் 14ஆம் தேதி துவங்கி நவம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தீப திருவிழா துவங்கும் முன், கோவிலில் இவ்விழாவுக்கான பூர்வாங்க பணிகளான, வாகனங்கள் புதுப்பித்தல், பழுது பார்த்தல், அழைப்பிதழ் அச்சிடுதல், தீபம் ஏற்ற நெய் கொள்முதல், வர்ணம் பூசுதல், என, பல்வேறு பணிகள் துவங்க விநாயகர், அண்ணாமலையார் மற்றும் பராசக்தி அம்மன், பரிவார தேவதைகள் ஆகியவற்றை வழிபட்டு, பணிகள் துவக்குவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டு கோவிலில், பந்தக்கால் முகூர்த்த விழா, இன்று காலை நடைபெற்றது.
பந்தக்கால் நடும் நிகழ்ச்சியை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் பந்தக்காலிற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. பின்னர் தேரடி முனீஸ்வரர் கோவில் மற்றும் பஞ்சமூர்த்திகளின் திருத்தேர்களுக்கு முன்பு வைத்து பூஜை செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து ராஜகோபுரம் முன்பு காலை 8.25 மணிக்கு துலா லக்கினத்தில் பூர்வாங்க பணிகளை செய்வதற்கான பந்தக்கால் நடப்பட்டது.
திருக்கோயில் பிச்சகர் விஜயகுமார் பந்தக்காலை நட்டார்.
இதில் மாவட்ட கலெக்டர் முருகேஷ், கோவில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம், உறுப்பினர்கள் டிவிஎஸ் ராஜாராம், கோமதி குணசேகரன், சினம் பெருமாள், டாக்டர் மீனாட்சி சுந்தரம் , திருக்கோயில் ஊழியர்கள், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.