அழகு மட்டுமல்ல, ஆரோக்கியமும் முக்கியமுங்க
கடந்த 20ஆண்டுகளுக்கு முன்பு, இத்தனை மருத்துவமனைகள், கிடையாது; இத்தனை பியூட்டி பார்லர்களும் இருக்காது. இன்று ஒரு ஊருக்கு பத்து மருத்துவமனைகள் உள்ளது. வீதிக்கு ஒரு பியூட்டி பார்லர் காணப்படுகிறது. தவிர்க்க முடியாத மருத்துவ செலவை போலவே, தங்களை அழகுபடுத்தி, பளிச்சிட வைக்கவும், மாதந்தோறும் பல ஆயிரங்களள செலவு செய்யும் மனிதர்களும் அதிகரித்து விட்டனர். பெண்கள் மட்டுமே தங்களை அழகுபடுத்தி கொள்ள, அழகு ;நிலையங்களுக்கு சென்ற நிலையில், கடந்த பத்தாண்டுகளில், ஆண்களுக்கான அழகு நிலையங்களும் கணிசமாக அதிகரித்து விட்டன. முடி திருத்தும் சலுான் கடைகளிலும் இப்போது, பேஷியல் செய்யப்படுவது வழக்கமாகி விட்டது.
அந்த காலத்தில், தினமும் காலையில் குளித்து முடித்துவிட்டு, தலைவாரி நெற்றியில் விபூதி பூசுவதோடு ஆண்களுக்கு மேக்கப் முடிந்துவிடுகிறது; பெண்கள், மஞ்சள் பூசிய முகத்தில் பான்ஸ் குட்டிக்குரா பவுடரை பூசினாலே, பேரழகாக தோன்றியது. ஆனால், இன்று வீடுகளிலேயே, ஆயிரக்கணக்கான ரூபாயில் அழகு சாதன பொருட்களை வாங்கி வைத்து, பெண்கள் தங்களை அழகுபடுத்தி கொள்கின்றனர். அழகு நிலைய ஊழியர்கள், வசதிபடைத்தவர்களின் வீடுகளுக்கு நேரில் வந்து, அழகுபடுத்தி விட்டு செல்கின்றனர். திருமண நாளில், மணப்பெண் மட்டுமே, இவ்வாறு அலங்காரம் செய்துகொள்ளும் நிலை மாறி, வெளியிடங்களுக்கு,, விசேஷங்களுக்கு செல்வது என்றாலே, பியூட்டி பார்லர்களுக்கு சென்று பலரும், ஸ்பெஷல் மேக்கப் செய்துகொள்வது அதிகரித்து விட்டது.
மற்றவர்கள் பார்வையில் அழகாக, தோற்ற பொலிவாக, பளிச் ஆக காட்சி தர அக்கறையும், ஆர்வமும் காட்டும் நம்மில் பலரும், உடல் ஆரோக்கியத்திலும், வலிமையான உடல் திறனோடும் வாழ்வதிலும் எந்த அளவுக்கு அக்கறையும், ஆர்வமும் காட்டுகிறோம் என்பதை யோசிக்க வேண்டியதாக உள்ளது.
மதுபானம் அருந்துவது, புகை பிடிப்பது, புகையிலை சார்ந்த நச்சு போதை பொருட்களை பயன்படுத்துவது, இரவு முழுவதும் துாங்காமல் கண்விழித்து டிவி அல்லது செல்போன் பார்ப்பது, உணவு கட்டுப்பாடு இல்லாமல், அதிகளவில் உணவு, எண்ணெய் பலகாரங்கள், நொறுக்கு தீனி உண்பது என உடல் ஆரோக்கியத்தை பலரும் கெடுத்து கொள்கின்றனர். ஜவுளிக்கடைகள், நகை கடைகளை போல, மாதந்தோறும் டாஸ்மாக் மதுக்கடைகளின் வருமானமும், பல கோடி ரூபாய்களை தாண்டிவிடுகிிறது.
உடல் தோற்றம் பொலிவாக இருப்பதை விட, உடல் ஆரோக்கியமே பிரதானம்; உடல் ஆரோக்கியமே, முகத்தை தெளிவாக காட்டும். மனதை பளிச்சிட வைக்கும். பேசும் வார்த்தைகளை இன்னும் அழகாக்கும். வாழ்வில் இனிமை சேர்க்கும்.
போதை பொருட்களை அறவே தவிர்ப்பது, தினமும் எட்டு மணி நேர உறக்கம், ஆரோக்கியமான சத்தான உணவு பழக்கம், காய்கறி, கீரை அதிகமாக சாப்பிடுதல், தினமும் காலையில் நடைபயிற்சி, யோகா, தியானம் போன்றவை உடல் நலத்தை மேம்படுத்தும். ஆரோக்கியத்தை கொடுத்து, உடலை வலிமையாக்கும். வாழ்க்கையை சிறப்பாக்கும்.
ஒவ்வொரு மனிதனின் மிகப்பெரிய உண்மையான சொத்து, அவனது உடம்பும், அதன் ஆரோக்கியமும் மட்டுமே, என்ற விழிப்புணர்வு முழுமையாக வந்துவிட்டால், அழகை காட்டிலும் ஆரோக்கியமே பிரதானம் என்ற தெளிவு உருவாகும் என்பதில் சந்தேகமே இல்லை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu