ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: தென்னாப்பிரிக்காவிற்கு 212 ரன்கள் இலக்கு

ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: தென்னாப்பிரிக்காவிற்கு 212 ரன்கள் இலக்கு

சாய் சுதர்சன் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியை கொண்டாடிய தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள்.

இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்கு இந்திய அணி 212 ரன்களை இலக்காக நிர்ணயித்து உள்ளது.

இந்தியா -தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு 212 ரன்களை இலக்காக நிர்ணயித்து உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து மூன்று ஆட்டங்களை கொண்ட ஒரு நாள் போட்டி தொடர் நடந்து வருகிறது. இதில் தென் ஆப்பிரிக்கா தலைநகர் ஜோகன்ஸ் பர்க்கில் நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அவர்களது சொந்த மண்ணிலேயே தென்னாப்பிரிக்காவை ஊதி தள்ளி வெற்றி பெற்றது. இதன் காரணமாக தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா- தென்னாப்பிரிக்க அணிகள் இடையிலான இரண்டாவது சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவின் ஹெபேகா நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பீல்டிங்கை தேர்வு செய்து இந்தியாவை பேட்டிங் செய்ய கேட்டுக்கொண்டது. இதன் காரணமாக இந்திய அணி முதலாவது பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக இந்திய அணியின் ருதுராஜ்கெய்க்வாட் மற்றும் தமிழக வீரர் சாய் சுதர்சன் களம் இறங்கினார்கள். முதல் ஓவரின் முதல் பந்தில் ருத்ராஜ் கெய்க்வாட் பந்தை பவுண்டரிக்கு விளாசி நான்கு ரன் சேகரித்தார். ஆனால் அடுத்த பந்தில் அவர் அவுட் ஆகிவிட்டார். இதனை தொடர்ந்து திலக் வர்மா களம் இறங்கினார்.

தொடர்ந்து சாய் சுதர்சனும் திலக் வர்மாவும் ஆடினார்கள். திலக் வர்மாவும் தனது விக்கெட்டை இழந்த நிலையில் கேப்டன் கே.எல். ராகுல் களம் இறங்கினார். சாய் சுதர்சன் பவுண்டரிகள் அடித்தது நம்பிக்கையை ஏற்படுத்தியது. இவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்து இந்திய அணியின் ரன் ரேட்டை உயர்த்திக்கொண்டே சென்றார்கள்.இந்நிலையில் சாய் சுதர்சன் தனது அரை சதத்தை கடந்து 62 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் அவுட் ஆனார்.அதனை தொடர்ந்து கேஎல் ராகுலும் 56ரன்களில் அவுட் ஆனார்.

அதனை தொடர்ந்து வந்த இந்திய அணி பேட்டர்கள் சோபிக்கவில்லை. குறைந்த ரன்களிலேயே ஒவ்வொருவராக அவுட் ஆனார்கள். இந்நிலையில் 46.2 ஓவர்கள் வீசி முடிக்கப்பட்டிருந்தபோது இந்திய அணி தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 211 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

இதனை தொடர்ந்து 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் செய்ய உள்ளது. தென்னாப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட ரன்களை எடுத்து வெற்றி பெற்றால் ஒரு நாள் போட்டி தொடரான 1-1 என்ற கணக்கில் சம நிலையில் இருக்கும். தென்னாப்பிரிக்கா தோல்வியை தழுவினால் இந்திய அணி தொடர்ந்து பெற்ற இரு வெற்றியின் காரணமாக தொடரை கைப்பற்றி சாதனை படைக்கும். தென்னாப்பிரிக்காவின் சொந்த மண்ணில் அவர்களை வீழ்த்தினால் அது இந்திய அணியின் வரலாற்று சாதனையாக கருதப்படும். எனவே இந்த போட்டியானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Tags

Next Story