இந்திய அணி அபார வெற்றி! ஆட்டத்தில் நடந்த சுவாரஸ்ய தருணங்கள்!

இந்திய அணி அபார வெற்றி! ஆட்டத்தில் நடந்த சுவாரஸ்ய தருணங்கள்!
X
இந்தியா vs பாகிஸ்தான் போட்டியின் சுவாரஸ்ய தருணங்கள்

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சு தேர்வு செய்தது. இதனால் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.

இந்திய அணியின் துவக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். துவக்க விக்கெட்டுக்கு இவர்கள் அதிரடியாக ரன் சேர்த்தனர். முதல் விக்கெட்டே 17வது ஓவரில்தான் இழந்தது.

சதாப் கான் வீசிய பந்தை அடிக்க முயற்சித்த ரோஹித் சர்மா அதனை பகீம் அஷ்ரப் கையில் கொடுத்து அவுட் ஆனார். அவர் 49 பந்துகளில் 56 ரன்கள் எடுத்திருந்தார்.

ஆரம்பத்தில் கொஞ்சம் அமைதியாக ஆடினாலும் பின் ருத்ரதாண்டவத்தைத் தொடங்கினார் ரோஹித். அவர் 4 சிக்ஸர்களையும் 6 பவுண்டரிகளையும் அடித்திருந்தார்.

18வது ஓவரில் சுப்மன் கில் ஷகீன் அப்ரடி பந்துவீச்சில் அவுட் ஆனார். அவர் 52 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து அசத்தியிருந்தார். சுப்மன் கில் 10 பவுண்டரிகளை விரட்டியிருந்தார்.

அடுத்ததாக விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார் கே எல் ராகுல். இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கனமழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது

ரிசர்வ் டே ஆட்டம்

நிறுத்தப்பட்ட அதே இடத்தில் துவங்கியது இன்றைய ஆட்டம். ரிசர்வ் தினமான இன்று விராட் கோலி, கேஎல் ராகுலுக்கு சிறந்த நாளாக அமைந்தது.

இருவரும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தனர். இவர்களது விக்கெட்டை எடுக்க பாகிஸ்தான் வீரர்கள் மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருந்தது. ஆனாலும் விக்கெட் விழவில்லை.

ஷகீன் அஃப்ரடி, நசீம் ஷா, ஃபஹீம் அஷ்ரஃப், ஹரிஸ் ரஃப் என அடுத்தடுத்து அனைவரது பந்து வீச்சையும் அடித்து நொறுக்கினர். ஒரு கட்டத்தில் இந்த வேகத்தில் போனால் 400 ரன்களையும் கடந்து போய்விடும் என்று எண்ணத் தோன்றியது.

அடுத்தடுத்து சதம்

மிக விரைவாக ஆடிய விராட் கோலி அவ்வப்போது கே எல் ராகுலுக்கு ஆட்டத்தை கொடுத்து வந்தார். கே எல் ராகுல் தனது 6 வது சதத்தைப் பூர்த்தி செய்தார். சற்று நேரத்தில் விராட் கோலியும் அதிரடியாக சதமடித்தார்.

ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 356 ரன்கள் எடுத்து மிக கடினமான இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்தது இந்திய அணி.

3 சிக்ஸர்களும் 9 பவுண்டரிகளும் அடித்து 94 பந்துகளில் 122 ரன்களைக் குவித்திருந்தார் விராட் கோலி. கே எல் ராகுல் தன் பங்குக்கு 2 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 106 பந்துகளில் 111 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருவரும் களத்தில் இருந்தனர்.

வெற்றி இலக்கு 357

50 ஓவர்களில் 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பாகிஸ்தான் அணி. பாகிஸ்தான் அணியின் பக்கர் ஜமான் - இமாம் உல் ஹக் ஜோடி ஓபனிங் வீரர்களாக களமிறங்கினர்.

தடுமாறி ஆடிய இமாம் உல் ஹக் 18 பந்துகள் ஆடியிருந்த நிலையில் 9 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து பாபர் அசாம் களமிறங்கினார். இவர் நன்றாக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 24 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து அவுட் ஆகி திரும்பினார். இதனால் 11 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 43 ரன்கள் எடுத்திருந்தது பாகிஸ்தான் அணி.

அடுத்த சில நிமிடங்களில் மழை குறுக்கிட, ஆட்டம் தடைபட்டது.

பின் 1 மணி நேர தாமதத்துக்கு பிறகு ஆட்டம் மீண்டும் தொடங்கியது. இடையில் மழை பெய்ததால் ஆட்டம் பந்துவீச்சுக்கு சாதகமானதாக மாறியது.

தொடர்ந்து சரிந்த விக்கெட்டுகள்

முகமது ரிஸ்வான், ஃபகர் ஜமான், சல்மான் அலி, சதாப் கான், இஃப்டிகார் அகமது என அடுத்தடுத்து அவுட் ஆகினர் பாகிஸ்தான் வீரர்கள்.

இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் தனது சுழலில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா, ஹர்திக் பாண்டியா, ஷர்துல் தாகூர் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பாகிஸ்தான் அணி 32 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா இலங்கை மோதல்

இந்நிலையில் இன்று இந்திய அணி இலங்கை அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் மதியம் 3 மணிக்கு தொடங்க இருக்கிறது.

Tags

Next Story