Asia Cup 2023 இந்தியா - இலங்கை மேட்ச்ல என்னல்லாம் நடந்துது தெரியுமா?

Asia Cup 2023 இந்தியா - இலங்கை மேட்ச்ல என்னல்லாம் நடந்துது தெரியுமா?
X
இந்தியா - இலங்கை ஆட்டத்தில் நடைபெற்ற சுவாரஸ்யமான நிகழ்வுகளைப் பற்றி தெரிந்துகொள்வோம்

ஆசிய கோப்பை கிரிக்கெட் 2023 போட்டிகள் இலங்கை தலைநகர் கொழும்புவில் அமைந்துள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்து, அடுத்த சுற்றான சூப்பர்4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகள் தகுதி பெற்றன.

சூப்பர் 4 சுற்றில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோதும். இந்த சுற்றின் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் தங்களில் யார் கோப்பைக்கு தகுதியானவர் என அடித்துக் கொள்ளும். இப்போதைக்கு இந்தியாவுடன் மோதப் போவது யார் பாகிஸ்தானா, இலங்கையா என்பதே களநிலவரம்.

சூப்பர்4 சுற்றின் 4-வது ஆட்டத்தில் இந்தியாவும், நடப்பு சாம்பியன் இலங்கையும் மோதின. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்குருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேல் சேர்க்கப்பட்டார். பிட்ச் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமையும் என்ற காரணத்தால் அக்ஷர் படேலை உள்ளே கொண்டு வந்தார் ரோஹித் சர்மா.

டாஸ் வென்ற இந்தியா

இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் டாஸ் வெல்றோம் அடுத்து மேட்ச் வெல்றோம் என்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில்லுடன் கேப்டன் ரோஹித் களமிறங்கினார். அருமையான கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா, இலங்கை பந்து வீச்சாளர் ஷனகாவின் ஒரே ஓவரில் 4 பவுண்டரிகளை அடித்து அசத்தினார். ரஜிதா, பதிரானா ஓவர்களிலும் சிக்சர் பறக்க விட்டு வான வேடிக்கை காட்டினார்.

அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள்

11 ஓவர்கள் வரை நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா விக்கெட் எதுவும் இழக்காமல், 80 ரன்கள் அடித்து பலமான அடித்தளத்தை உருவாக்கி வைத்திருந்தது. ஆனால் இவர்களுக்கு எமனாக வந்த ஒரு இளைஞன் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 12-வது ஓவரில் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் துனித் வெல்லாலகே பந்துவீச தனது முதல் பந்தில் சுப்மன் கில் (19 ரன்), அடுத்தடுத்த ஓவர்களில் விராட் கோலி (3 ரன்), ரோகித் சர்மா (53 ரன்) என டாப் ஆர்டரை காலியாக்கினார்.

நன்கு சுழன்று திரும்பிய ஆடுகளத்தை சரியாக கணிக்காமல் ஆடுகிறார்கள் என பலரும் விமர்சனம் வைத்தனர். ஆனாலும் கடைசி வரை இந்திய அணி ஆமை வேக ஆட்டத்தையே வெளிப்படுத்தியது.

கே எல் ராகுல் (39 ரன், 44 பந்து, 2 பவுண்டரி) , இஷான் கிஷன் 33 ரன் (61 பந்து) எடுத்திருந்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினர். வெல்லாலகே மட்டுமின்றி இலங்கை அணியின் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர்கள் சாரித் அசலங்கா, தனஞ்ஜெயா டி சில்வா ஆகியோரும் ரன்வேகத்தை கட்டுப்படுத்தினர்.

ஹர்திக் பாண்ட்யா (5 ரன்), ரவீந்திர ஜடேஜா (4 ரன்) என அவுட் ஆக அக்ஷர் பட்டேல் மட்டும் கடைசி கட்டத்தில் கைகொடுத்து அணியின் மொத்த ஸ்கோர் 200-ஐ கடக்க உதவினார். இறுதியில் அக்ஷர் 26 ரன்களில் (36 பந்து, ஒரு சிக்சர்) ஆட்டமிழந்தார்.

முடிவில் இந்திய அணி 49.1 ஓவர்களில் 213 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிமையான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இலங்கை அணி தரப்பில் பதும் நிசங்கா, கருணரத்னே உடனடியாக அவுட் ஆக, குஷால் மெண்டீஸ் 15 ரன்களும் சமரவிக்ரமா 17 ரன்களும் எடுத்து வெளியேறினர். அசலங்கா 22 ரன்களும் தனஞ்சயா 41 ரன்களும் எடுத்து அணியை ஓரளவுக்கு தலைநிமிரச் செய்தனர்.

இந்தியா வெற்றி

அதிரடியாக ஆடி 5 விக்கெட்டுகளை எடுத்த வெல்லாலகே பேட்டிங்கிலும் சாதுர்யம் காட்டினார். அவர் 42 ரன்கள் எடுத்து ஒருகட்டத்தில் இலங்கை அணியை வெற்றி பெற செய்துவிடுவார் என்று தோன்றியது. ஆனால் அவருக்கு பின் வந்த வீரர்கள் யாரும் ஒத்துழைப்பு அளிக்காமல் அவுட் ஆக, இலங்கை அணியின் இன்னிங்க்ஸ் முடிவுக்கு வந்தது.

41.3 ஓவர்களில் இலங்கை அணி 172 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

வெல்லாலகே 42 ரன்களுடன் (46 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தார். இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், ஜடேஜா, பும்ரா தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதன்மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அடுத்து நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் - இலங்கை ஆகியோரில் ஒரு அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இந்த போட்டி அவர்கள் இருவருக்கும் மிக முக்கியமான போட்டியாக கருதப்படுகிறது.

Tags

Next Story