உலக கோப்பை கிரிக்கெட்: மேக்ஸ்வெல் அதிரடியால் ஆஸ்திரேலியா அபார வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட்:  மேக்ஸ்வெல் அதிரடியால் ஆஸ்திரேலியா அபார வெற்றி

201 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்த மகிழ்ச்சியில் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டத்தால் ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா கடந்த அக்டோபர் மாதம் 5ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்காளதேசம், பாகிஸ்தான், நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்கா உட்பட 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இந்த லீக் போட்டியில் முதல் நான்கு இடங்களை பெறும் அணிகள் அரையிறுதி போட்டியில் பங்கேற்கும். அரை இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் இரு அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்பது இந்த போட்டியின் விதிமுறையாகும்.

அந்த வகையில் இந்தியா இதுவரை பங்கேற்ற 8 போட்டிகளிலும் வெற்றி பெற்று அரை இறுதி போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. மேலும் புள்ளிகள் பட்டியலில் 16 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. ரன் ரேட்டிலும் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் தென் ஆப்பிரிக்கா உள்ளது.

ஆக இந்தியாவும் ,தென்னாப்பிரிக்காவும் அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் அடுத்து அரையிறுதி சுற்றுக்குள் நுழையக்கூடிய இரண்டு அணிகளை தேர்வு செய்வதற்கான லீக் போட்டிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

அந்த வகையில் இன்று மும்பையில் ஆஸ்திரேலியா -ஆப்கானிஸ்தான் அணிகள் பகல் இரவு ஆட்டமாக மோதின/ இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியினர் முதலில் பந்தடித்தனர். ஆஸ்திரேலியா அணி பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பந்தடித்து 291 ரன்கள் எடுத்திருந்தனர். அந்த அணியின் இப்ராஹிம் 129 ரன்கள் அடித்திருந்தார். உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ஆப்கானிஸ்தான் அணி வீரர் ஒருவர் சதம் அடித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

அதனைத் தொடர்ந்து 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது. ஆஸ்திரேலியா அணி வீரர்களின் பேட்டிங் முதலில் எடுபடவில்லை. பவர் பிளே சுற்றில் அவர்கள் நான்கு விக்கெட்டுகளை இழந்து குறைந்த ரன்களையே எடுத்திருந்தனர். 8.3 ஓவர்கள் வீசி முடிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த அணியானது 4 விக்கெட்டுகளை இழந்து 49 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

தொடர்ந்து மற்ற வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். ஆஸ்திரேலியா அணியின் மேக்ஸ்வெல் மட்டும் நங்கூரம் போல் நின்று ரன்களை தொடர்ந்து எடுத்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் மேக்ஸ்வெல் அடித்த பந்தை முஜிபுர் ரகுமான் கேட்ச் தவற விட்டது ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது. அதன் பின்னர் மேக்ஸ்வெல் வீறு கொண்டு எழுந்து சிக்ஸ் மற்றும் பவுண்டரிகளை விளாசி தள்ளினார்.

ஒரு கட்டத்தில் காலில் தசை பிடிப்பு ஏற்பட்டு மேக்ஸ்வெல் மைதானத்தில் நெடுஞ்சான் கிடையாக விழுந்தார். உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னரும் அவர் பெவிலியனுக்கு திரும்பாமல் கால் வலியுடன் ஓட முடியவில்லை என்றாலும் சிக்ஸ், போர் என அடித்தார். இறுதியாக அவர் மட்டும் 126 பந்துகளில் 201 ரன்கள் அடித்து வெற்றி இலக்கான 292 ரன்களை தாண்ட வைத்தார். இதன் மூலம் உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியாவிற்காக 200ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தி உள்ளார்.

இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி ஆப்கானிஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்று, அரை இறுதி சுற்றுக்குள் நுழையும் மூன்றாவது அணி என்ற தகுதியையும் பெற்று உள்ளது.

Tags

Next Story