உலக கோப்பை கிரிக்கெட்:தென் ஆப்பிரிக்காவை அடித்து நொறுக்கி இந்தியா அபார வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட்:தென் ஆப்பிரிக்காவை அடித்து நொறுக்கி இந்தியா அபார வெற்றி

சதம் அடித்த மகிழ்ச்சியில் விராட் கோலி.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை அடித்து நொறுக்கி இந்தியா அபார வெற்றி பெற்றது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, தென்னாப்பிரிக்காவை அடித்து நொறுக்கி 243 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடி உள்ளது.

இந்தியாவில் உலகக்கோப்பை போட்டி திருவிழா கடந்த அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து உள்பட 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இந்த லீக் போட்டிகளில் முதல் 4 இடங்களில் முன்னிலை வகிக்கும் அணிகள் அரை விதி போட்டிக்கு தகுதி பெறும்.

அரை இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணிகள் இறுதி போட்டியில் விளையாட வேண்டும் என்பது விதிமுறை ஆகும். அந்த வகையில் தற்போது லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை 7 போட்டிகளில் மோதிய அணிகள் அனைத்தையும் வீழ்த்தி வெற்றி வாகை சூடி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் தென் ஆப்பிரிக்கா உள்ளது.

இந்திய அணி அரையிறுதி போட்டிக்கு ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது. அதே போல் தென்னாப்பிரிக்க அணியும் அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த நிலையில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான போட்டி பகல் இரவு ஆட்டமாக நடந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மாவும் அதிரடி ஆட்டக்காரர் சுப்மன் கில்லும் இறங்கினார்கள். தென்னாபிரிக்க அணி வீரர்களின் பந்துகளை எல்லாம் பவுண்டரி,சிக்ஸ் என ரோஹித் சர்மா விளாசிக் கொண்டிருந்தார். ஆனால் அவரால் நீண்ட நேரம் நீடிக்க முடியவில்லை. இந்த ஜோடி சேர்ந்து 80 ரன்களை தாண்டிய நிலையில் முதலில் ரோஹித் சர்மா அவுட் ஆனார் அதனைத் தொடர்ந்து கில்லும் அவுட் ஆனார்.

அடுத்து இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியும், ஸ்ரேயஸ் அய்யரும் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி நிதானமாக ஆடி இந்தியாவின் ரன் ரேட்டை அதிரடியாக இல்லாவிட்டாலும் நிரந்தரமாக உயர்த்திக் கொண்டே இருந்தார்கள். ஸ்ரேயஸ் அய்யர் 77 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து கே.எல் ராகுல், சூரியகுமார் யாதவ், ஜடேஜா ஆகியோர் வந்து கோலியுடன் ஜோடி சேர்ந்து இந்தியாவின் ரன்களை உயர்த்தி கொண்டே சென்றனர். இந்த நேரத்தில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் கோலி சதம் அடித்து பிறந்தநாள் பரிசை வெளிப்படுத்தினார்.

இறுதியாக இந்திய அணியானது 50 ஓவர்கள் வீசி முடிக்கப்பட்ட நிலையில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 326 ரன்கள் எடுத்திருந்தது. 327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் அடுத்து தென்னாப்பிரிக்கா களம் இறங்கியது.

தென் ஆப்பிரிக்கா அணியை பொறுத்தவரை இதுவரை தான் மோதிய அனைத்து போட்டிகளிலும் 300 மற்றும் 400 என அதிரடியாக ரன்களை குவித்த தென் ஆப்பிரிக்கா அணிக்கு இது பெரிய டார்கெட் இல்லை. அவர்கள் அழகாக சேஸ் செய்து வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக தான் கிரிக்கெட் ரசிகர்கள் கணித்திருந்தார்கள். ஆனால் அந்த கணிப்பு இன்று பொய்யானது.

தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமாவும், டிகாக்கும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போன டிகாக் இந்திய அணியின் பும்ரா வேகப்பந்தில் முதல் ஓவரிலேயே 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார்.அதனை தொடர்ந்து பவுமாவும் 11 ரன்களில் அவுட் ஆனார். இப்படி தென் ஆப்பிரிக்க அணி வீரர்களின் விக்கெட் சீட்டு கட்டு போல் தொடர்ந்து சரிந்து கொண்டே இருந்தது.

15 ஓவர்கள் வீசி முடிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்து 52ரன்களை மட்டுமே எடுத்து பரிதாபமான நிலையில் இருந்தது. இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க அணிக்கு தோல்வி உறுதியான நிலையில் விராட் கோலி மைதானத்தில் நடனம் ஆட தொடங்கினார்.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி ஆட்டக்காரர் மில்லரும் 11 ரன்களில் கிளீன் போல்ட் ஆகி தனது விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து கேசவ் மகராஜ் 7 ரன்களிலும் யான்சன் 14 ரன்களிலும் அவுட் ஆனார்கள்.

இறுதியாக தென் ஆப்பிரிக்கா அணி 27.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 83 ரன்களை மட்டுமே எடுத்தது.இதன் காரணமாக இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை அடித்து நொறுக்கி 243 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லீக் போட்டியில் இந்திய அணி தொடர்ந்து எட்டாவது வெற்றியை பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

Tags

Next Story