கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி உலக கோப்பையை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி உலக கோப்பையை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

உலக கோப்பையை கைப்பற்றிய மகிழ்ச்சியில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள்.

கிரிக்கெட் உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி உலக கோப்பையை ஆஸ்திரேலியா கைப்பற்றி உள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா மீண்டும் உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை பெற்று உள்ளது.

இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி திருவிழா கடந்த அக்டோபர் மாதம் 5ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து உள்பட 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.

லீக் போட்டியில் தன்னை எதிர்த்து விளையாடிய 9 அணிகளையும் வீழ்த்திய இந்திய அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. அரை இறுதி போட்டியில் நியூசிலாந்தை எளிதாக வீழ்த்தி வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தது. இதே போல இன்னொரு அரை இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணிகள் மோதியதில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது

இறுதி போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் கம்மின்ஸ் தாங்கள் பீல்டிங் செய்வதாகவும் இந்திய அணியை பேட்டிங் செய்யுமாறு பணித்துக் கொண்டார்.

இதனால் இந்திய அணிமுதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக ஆடினார். ஆனால் அவருக்கு பக்கபலமாக இருந்த சுப்மன்கில் 6ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனது அவருக்கு கை உடைந்தது போல் ஆனது. தொடர்ந்து 47 எண்கள் எடுத்திருந்த நிலையில் ரோஹித் சர்மாவும் கேட்ச் அவுட் ஆனார். கோலி 50 ரன்களை தாண்டிய நிலையில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அவரும் அவுட்டானார்.

இப்படி இந்திய அணி வீரர்களின் விக்கெட் வரிசையாக விழுந்து கொண்டே இருந்தது. இறுதியாக இந்திய அணி 50 ஓவரின் கடைசி பந்தில் ஆல் அவுட் ஆகி 240 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஆஸ்திரேலிய வீரர்களின் பவுலிங் மிக சிறப்பாக இருந்ததால் இந்திய அணி வீரர்கள் ரன்களை குவிக்க முடியவில்லை. இது மைதானம் முழுவதும் கூடி இருந்த லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. அந்த வகையில் 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கை ஆஸ்திரேலியா அணிக்கு இந்தியா நிர்ணயித்து இருந்தது.

241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் ஆஸ்திரேலிய வீரர்களின் விக்கெட்டுகள் வரிசையாக மூன்று விழுந்தாலும் பின்னர் அவர்கள் நிலைத்து நின்று ஆட தொடங்கினர். ஹெட், லபுஷேன் ஜோடி நங்கூரம் போன்று நின்று ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு வழி வகுத்தனர். ஹெட் சதம் அடித்தார். அவர் 137 ரன்கள் எடுத்த போது கேட்ச் அவுட் ஆனார். லபுஷேன் அரை சதத்தை தாண்டினார். இறுதியாக 43 ஓவர்களில் ஆஸ்திரேலியா இலக்கை தாண்டியது. இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா 2023ம் ஆண்டின் உலக கோப்பையை கைப்பற்றி உள்ளது.

ஏற்கனவே ஐந்து முறை உலக கோப்பையை கைப்பற்றி இருந்த ஆஸ்திரேலியா இந்த வெற்றியின் மூலம் தற்போது ஆறாவது முறையாக உலக கோப்பையை தட்டி பறித்து சென்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story