தோனியின் பாசமழையில் ஆனந்த கண்ணீருடன் விடைபெற்ற அம்பத்தி ராயுடு!

ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக ஆடி வந்த அம்பத்தி ராயுடு தனது கடைசி ஆட்டத்தை நேற்று ஆடி முடித்து, அத்துடன் விடைபெற்றுக் கொண்டார். இத்தனை ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப் பெரிய பரிசை நேற்று தோனியிடமிருந்து பெற்றார் சென்னை அணியின் பாகுபலி அம்பத்தி ராயுடு.
ஐபிஎல் தொடரின் 16வது சீசன் இன்று அதிகாலை சென்னையின் வெற்றியோடு நிறைவடைந்தது. அத்துடன் அம்பத்தி ராயுடுவும் ஐபிஎல் தொடரிலிருந்து விடைபெற்று சென்றார். வெற்றிக் கோப்பையை தனது கைகளில் பெற்று தனது ஆனந்த கண்ணீரால் பலரையும் கண்கலங்கச் செய்தார் அம்பத்தி ராயுடு.
கடந்த 2010ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக அறிமுகமான அம்பத்தி ராயுடு, 2017ம் ஆண்டு வரை தொடர்ந்து 8 ஆண்டுகள் மும்பை அணிக்காக தனது திறமையான பேட்டிங்கால் பல வெற்றிகளைப் பெற்றுத் தந்தார். அந்த 8 ஆண்டுகளில் மும்பை அணி 3 முறை ஐபிஎல் கோப்பையை வென்றிருக்கிறது. அதன்பிறகு 2018ம் ஆண்டிலிருந்து சென்னை அணியில் இடம்பிடித்து இப்போது வரை ஆடியிருக்கிறார். இதில் சென்னை அணி சார்பில் 3 கோப்பைகளைப் பெற்றிருக்கிறார். இதன்மூலம் இவர் விளையாடிய அணிகள் 6 முறை கோப்பையை வென்றிருக்கிறது. இதில் இவரது பங்கும் இருக்கிறது. மொத்தம் 14 ஆண்டுகள் சென்னை மற்றும் மும்பை என இரண்டு ஜாம்பவான் அணிகளுக்காக ஆடியுள்ள இவரும் ஜாம்பவான் வீரர்தான்.
இவர் களத்தில் நின்றால் எதிரணி பவுலர்கள் எப்படி பந்து வீச என்பதை நினைத்து குழம்புவார்கள். அந்த அளவுக்கு எல்லா வகையான ஷாட்களையும் ஆடுவார் அம்பத்தி. இந்த ஆண்டு தொடக்கம் முதலே அவர் சரியாக ஆடமுடியாமல் திணறி வந்தார். சில ஷாட்கள் அடித்தாலும் பெரிய ஸ்கோரை எதுவும் அடிக்காமல் இருந்தார். அம்பத்தி ராயுடுவின் பங்கு இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்கு பெரிய பலமாக இல்லாத நிலையிலும், இறுதிப் போட்டியில் வெற்றி தேடி தந்தது இவர் சரியான நேரத்தில் அடித்த 3 பவுண்டரிகள்தான் அதில் 2 சிக்ஸர்களும், 1 நான்கும் அடங்கும். இவர்தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றியவர். பின்னர் கடைசி கட்டத்தில் ஜடேஜா சிக்ஸரும் ஃபோரும் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார்.
கோப்பையை வென்ற நிலையில் தோனியின் கைகளில் கோப்பை ஒப்படைக்கப்பட, அதனை அம்பத்தி ராயுடுவிடம் கொடுக்க வைத்து அவரை நெகிழச் செய்தார். ஆனந்த கண்ணீருடன் நெகிழ்ந்து இருந்த அவரை பலரும் ஆறுதல் படுத்தினர்.
ஐபிஎல் கிரிக்கெட்டின் அற்புதமான இரண்டு அணிகளில் விளையாடியிருக்கிறேன் அது மிகவும் மகிழ்ச்சி. இந்த முறை கோப்பையை வென்றது மிகவும் மகிழ்ச்சியான தருணம். இந்த ஒரு வெற்றியை என் வாழ்நாள் முழுக்க மறக்கமாட்டேன். கடந்த 30 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருகிறேன். கடினமான பல தருணங்களைச் சந்தித்திருக்கிறேன். இப்படி ஒரு தருணத்தில் நான் எனது கெரியரை நிறைவு செய்வதில் மகிழ்கிறேன். குடும்பம் மற்றும் தந்தைக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். அவர்கள் இல்லையென்றால் நான் இந்த இடத்தில் நின்றிருக்க முடியாது என ஆனந்த கண்ணீருடன் அம்பத்தி ராயுடு பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu