வைர வரிகளை நமக்கு அளித்த வேதாத்திரி மகரிஷி மறைந்த நாள் இன்று.

வைர வரிகளை நமக்கு அளித்த வேதாத்திரி மகரிஷி மறைந்த நாள் இன்று.
X
Vethathiri Maharishi Quotes in Tamil-வாழ்க வையகம் வாழ்க வளமுடன் என்ற வைர வரிகளை நமக்கு அளித்த வேதாத்திரி மகரிஷி மறைந்த நாள் இன்று

Vethathiri Maharishi Quotes in Tamil

வாழ்க வையகம் வாழ்க வளமுடன் என்ற வைர வரிகளை நமக்கு அளித்த வேதாத்திரி மகரிஷி மறைந்த நாள் இன்று:

அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் சென்னைக்கு அருகில் உள்ள கூடுவாஞ்சேரி என்னும் கிராமத்தில் செங்குந்த கைக்கோளர் மரபில் நெசவுத் தொழில் செய்யும் வரதப்ப முதலியார், முருகம்மாள் (சின்னம்மாள்) தம்பதியர்களுக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்தார். சிறுவயது முதலே வேதாத்திரி மகரிஷி அவரது தாயார் சின்னம்மாளிடம் நிறைய பக்திக் கதைகளையும், புராணக்கதைகளையும் அறிந்து கொண்டார்.

இவரது குடும்பச்சூழலில் இவருக்கு அதிகம் படிக்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. தன்னுடைய சொந்த ஊரில் மூன்றாவது வகுப்பு வரை படித்த இவர், பின்னர் தங்கள் குடும்பத் தொழிலான தறி நெய்தலைச் செய்யத் தொடங்கினார்.

18ஆவது வயதில் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் வாய்ப்பு இவருக்கு ஏற்பட்டது. சென்னையில் இவருக்கு ஆயுர்வேத மருத்துவர் எஸ். கிருஷ்ணாராவின் நட்பு கிடைக்க, அவர் மூலமாக தியானம், யோகா போன்றவைகளைக் கற்றார் மகரிஷி.

கொங்கு நாட்டில் பொள்ளாச்சி நகருக்கு அருகே வால்பாறை மலையோரத்தில் ஆழியாறு நீர்த்தேக்கம் அமைந்துள்ள இடத்தில் அருட்பெருஞ்ஜோதி நகர் எனும் நகரம் வேதாத்திரி மகரிஷியால் 1984 கால கட்டத்தில் அமைக்கப்பட்டது. அன்பொளி என்னும் ஆன்மீக இதழ் ஒன்றையும் வெளியிட்டார். இன்றும் தமிழ், ஆங்கிலம் மொழிகளில் வெளிவருகின்றன. வேதாத்திரி அவர்கள் தனது 95வது வயதில் மார்ச் 28, 2006 செவ்வாய்க்கிழமையன்று மறைந்தார்.

தவத்தின் பயன்கள் பத்து என்று நமக்கு அருளியிருக்கிறார் வேதாத்திரி மகரிஷி.

'வாழ்க வளமுடன்' எனும் வாசகத்தை தாரக மந்திரமாகக் கொண்டு, மக்களுக்கு போதித்தவர் வேதாத்திரி மகரிஷி. இவர் அமைத்துக் கொடுத்த 'மனவளக்கலை' எனும் பயிற்சி இன்றைய உலகின் மன அழுத்தத்தில் இருந்தும் டென்ஷன் முதலானவற்றில் இருந்தும் விடுவிக்க வல்லது என்கிறார்கள் மனவளக்கலையைக் கற்றுத் தரும் பேராசிரியர்கள்.

'மனவளக்கலை என்பது மிக எளிமையான பயிற்சி. கிட்டத்தட்ட, இலகுவான முறையில் நாம் செய்கின்ற தவம். இந்தத் தவத்தின் பலன்கள் எண்ணிலடங்காதவை. முக்கியமாக தவத்தின் பயன்களாக பத்து விஷயங்களைச் சொல்லுகிறேன்' என்று வேதாத்திரி மகரிஷி விவரித்துள்ளார்.

1. மனித வாழ்வின் பெருநிதியாகிய கரு மையத்தைத் தூய்மையாகவும், வலுவுடையதாகவும், அமைதியும் இன்பமும் பெருக்கும் திறனுடையதாக்க் கொள்ளவும் மனவளக்கலை எனும் தவம் உதவுகிறது.

2) நமக்குள்ளே இருக்கிற இறையுணர்வு வெளிப்படும். அறநெறி நின்று வாழும் தன்மையை மேம்படுத்தும். .

3) மனத்தின் விரியும் தன்மை பெருகுகிறது. மனதைக் குறுக்கிக் கொண்டு சிந்திப்பதெல்லாம் கடந்து, பரந்த மனத்துடன் பரந்துபட்டு எல்லா மனிதர்களையும் அவர்களின் கவலைகளையும் நாம் எடுத்துக் கொண்டு பிரார்த்திக்கிற குணம் வந்துவிடும்.

4) எண்ணம், சொல், செயல்கள் மூன்றும் மூன்று திசைகளில் இருந்த நிலை மாறும். மூன்றும் ஒரே திசையில் பயணிக்கும். செயலாலும் சொல்லாலும் முக்கியமாக எண்ணத்தாலும் கூட தவறு செய்யாத நிலையை அதிகப்படுத்திக் கொண்டே இருக்கும்.

5) அறிவின் திறன் கூடும். அதன் கிரகிக்கும் சக்தியும் அதிகரிக்கும். .

6) எல்லோரிடமும் ஒத்துப் போகிற குணம் வந்துவிடும். எதையும் சகித்துக் கொள்ளுகிற மனோநிலை பெருகும். .

7) அவ்வப்போது செய்துவிடக் கூடிய தவறுகளையும், நம்மிடம் இருக்கக் கூடிய தீய குணங்களையும் களைந்து தூய்மையைப் பெருக்கிக் கொள்ள துணைபுரிகிறது. அதுமட்டுமல்ல... பிறரின் குற்றம் குறைகளை இயல்பாகப் பார்க்கின்ற குணமும் அவர்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் குத்திக்காட்டாத பேச்சும் என்றெல்லாம் நம்மை மாற்றிவிடும்.

8) ஆக்கப் பூர்வமான செயல்களைச் செய்கின்ற திறன் மொத்தத்தையும் வழங்கும்.

9) தன் அமைதி, குடும்ப அமைதி, சமுதாய அமைதி முதலானவற்றையே வாழ்க்கையாகக் கொள்வோம். இவையே உலக அமைதிக்கு வழி வகுக்கின்றன.

10) நடக்கக் கூடியதையே நினைக்கச் செய்து நினைத்ததையே நடக்கச் செய்கிறது.

இப்படியான தவத்தின் பலன் எல்லோருக்கும் கிடைக்கட்டும். வாழ்க வையகம். வாழ்க வளமுடன்' என்று விவரித்துள்ளார் வேதாத்திரி மகரிஷி. .

மகரிஷியின் பாடலில் ஒன்று

"எல்லாம் வல்ல தெய்வமது

எங்கும் உள்ளது நீக்கமற

சொல்லால் மட்டும் நம்பாதே

சுயமாய்ச் சிந்தித்தே தெளிவாய்

வல்லாய் உடலில் இயக்கமவன்

வாழ்வில் உயிரில் அறிவும் அவன்

கல்லார் கற்றார் செயல் விளைவாய்க்

காணும் இன்ப துன்பமவன்.

அவனின் இயக்கம் அணுவாற்றல்

அணுவின் கூட்டுப் பக்குவம் நீ

அவனில் தான் நீ உன்னில்

அவன் அவன் யார்? நீயார்? பிரிவேது?

அவனை மறந்தால் நீ சிறியோன்

அவனை அறிந்தால் நீ பெரியோன்

அவன் நீ ஒன்றாய் அறிந்த இடம்

அறிவு முழுமை அது முக்தி. ""


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
how ai is used in education