Tiruvannamalai Arunachaleswarar Temple- மலை வடிவில் ஈசன் வீற்றிருக்கும் திருத்தலம் திருவண்ணாமலை!
சிவ பெருமானே மலை வடிவில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்புரியும் அக்னி ஸ்தலம் திருவண்ணாமலைக்கு சென்றுவந்தால், கிரிவலம் சென்று வந்தால் ஏராளமான நன்மைகள் வாழ்வில் நடக்கும்.
HIGHLIGHTS
Tiruvannamalai Arunachaleswarar Temple- இத்தலத்தினை நால்வர் என்று அழைக்கப்படும் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோர் தேவாரம் பதிகங்களைப் பாடியுள்ளார்கள். இத்தலத்தின் மூலவர் சிவபெருமான் என்றாலும், இங்குள்ள முருகன் மீது அருணகிரி நாதர் பாடல்களைப் பாடியுள்ளார். இத்தலத்தில் உள்ள மலை எல்லா யுகங்களிலும் அழியாமல் இருப்பதாகவும், இம்மலையானது சிவபெருமானே என்றும் சைவர்கள் நம்புகிறார்கள். இதனால் இம்மலையை வலம் வருதலைக் கடைபிடிக்கின்றனர். இவ்வாறு மலையை வலம் வருதல் கிரிவலம் என்று அழைக்கப்படுகிறது.
பல்வேறு நகரங்களிலிருந்தும் ஊர்களிலிருந்தும் எண்ணற்ற சித்தர்கள் இந்நகருக்கு வந்து வாழ்ந்து சமாதியடைந்துள்ளார்கள். அவர்களில் ரமணர், சேஷாத்திரி சாமிகள், விசிறி சாமிகள், குரு நமச்சிவாயர், குகை நமச்சிவாயர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களின் சமாதிகள் கிரிவலப் பாதையில் அமைந்துள்ளன.
முக்தி தரும் தலங்களில் திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி தரும் என்பது சைவர்களின் நம்பிக்கையாகும்.
மலை மருந்திட நீ மலைத்திடவோ அருள்
மலை மருந்தாய் ஒளிர் அருணாசலா’
- அருணாசல அட்ச ரமணமாலை
“இவ்வுடலை ‘நான்’ என்று மயங்கும் மலைப்புக்கு மருந்து தர நீ மலைக்கலாமா? நீதான் அருள் மருந்து மலையாக இருக்கின்றாயே”
நம் பிறவிப் பிணி தீர்க்கும் மாமருந்தா, மலை வடிவில் ஈசன் வீற்றிருக்கும் திருத்தலம் திருவண்ணாமலை! அதனுள் அருட்சுடராய் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி கலந்திருப்பது, அருணாசலமும், அருள்மலையும் ஓருருவாய் என்றும் நம்மை காத்துக்கொண்டிருக்கவோ?
கார்த்திகை தீபத்துக்குப் பெயர் பெற்ற இம்மலை மீது பகவான் ரமணர் கொண்டிருந்த அன்பும், பக்தியும் அளவிட முடியாதது. “திருவண்ணாமலை வெறும் மலை அல்ல; திருஞான சம்பந்தர் ‘ஞானத்தின் உரு’ என்று கூறியபடி, ஞானமே உருவான புனிதமலை’ என்கிறார் பகவான். ஆத்ம விசாரத்துக்கு அடுத்தபடியாக அவர் நமக்குப் பரிந்துரை செய்வது உடலுக்கு ஆரோக்யத்தையும், உள்ளத்துக்கு ஆத்ம சாந்தியையும் அளிக்கும் ‘கிரிவலம்’தான்.
இங்கு தவம் செய்துகொண்டிருந்த பார்வதி தேவிக்கே திருக்கார்த்திகை தினத்தன்று, பிரதோஷ காலத்தில் கிரிவலம் வந்த பிறகுதான் தீப தரிசனம் கிடைத்ததாம்.
அருணாசலேஸ்வரர் நந்திகேஸ்வரருக்கு கிரி பிரதக்ஷிண மகிமையைப் பற்றிக் கூறியதை ஸ்ரீரமணரும் தன் பக்தர்களுக்கு
‘பிர... நம் எல்லாப் பாவங்களையும் போக்கும்
த...நம் விருப்பங்களை நிறைவேற்றும்
க்ஷி... மறுபிறவியை ஒழிக்கும்
ணம்... ஞானத்தையும் முக்தியையும் அளிக்கும்’
என்று எடுத்துக் கூறுகிறார். மேலும் இம்மலையை வலம் வர ஒரு அடி எடுத்து வைத்தால் யாகம் செய்த பலனும், இரண்டு அடி எடுத்து வைத்தார்க்கு இராஜ சூய யாகம் செய்த பலனும், மூன்றடி வைத்தவர்களுக்கு அசுவமேத யாகம் செய்த பலனும், நான்கடி வைத்தவர்களுக்கு எல்லா யாகத்தின் பலனும் கிடைக்கும்.
கிரிவலத்தின்போது சித்தர்களும் யோகிகளும் சூட்சம சரீரத்தில் வலம் வந்துகொண்டிருப்பதை பகவானே பார்த்திருக்கிறார்! அவர்களுக்கு இடையூறு இல்லாது சாலையின் இடப்பக்கமாகவே பிரதக்ஷிணம் செய்தால் அவர்களையும் சேர்த்து வலம் வந்த பலன் நமக்குக் கிடைக்கும்.
ஒருமுறை கிரிவலம் சென்றுவிட்டால், மறுபடி, மறுபடி செல்ல வேண்டும் என்றே தோன்றும்! ‘நம்மால் முடியாது’ என்று நினைப்பவர்களைக்கூட தன் பேரருளினால் நடக்க வைத்துவிடுவார் அண்ணாமலையார்!
ஸ்ரீரமணர் தன் பக்தர்களுடன் கிரிவலம் வரும்போது சில சமயங்களில் - வழியில் உள்ள தீர்த்தங்கள், ஆஸ்ரமங்கள், கோயில்கள் ஆகிய இடங்களில் தரிசனம் செய்வதுடன், சற்று ஓய்வெடுத்துக்கொண்டு கிரிவலத்தைத் தொடர மூன்று நாட்கள்கூட ஆகிவிடுமாம்.
ஸ்ரீ ரமண மகரிஷி
பாலயோகியாக திருவண்ணாமலைக்கு வந்த நாளிலிருந்து ஜீவசமாதியாகும்வரை எங்கும் செல்லாது, அசையா மாமலையாக இன்றும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் மோனச்சூடராக ஒளிர்ந்துகொண்டிருக்கும் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகளையும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருவண்ணாமலையையும் தரிசித்து நலம் பெறுவோம்!