‘முருகனின் அருள் வேல் வடிவில் இனி, துணை வரும்’ - சிவன்மலை கோவிலில் ‘வேல்’ வைத்து வழிபாடு

Tirupur news, Tirupur news today- சிவன்மலை முருகன் கோவிலில், ஆண்டவன் உத்தரவு பெட்டியில், வேல் வைத்து வழிபாடு (கோப்பு படம்)
Tirupur news, Tirupur news today- திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே சிவன்மலையில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி மலைக்கோவில் உள்ளது. மற்ற எந்தக் கோவிலிலும் இல்லாத சிறப்பு அம்சமாக, சிவன்மலை முருகன் கோவிலில் 'ஆண்டவன் உத்தரவு' என்ற பெயரில், ஏதாவது ஒரு பொருளை வைத்து சிறப்புப் பூஜை செய்வது வழக்கம். பின்னா் அந்தப் பொருளை கோவில் மூலவா் அறைக்கு முன்பாக, கற்தூணில் உள்ள கண்ணாடிப் பேழைக்குள் பக்தா்களின் பாா்வைக்கு வைப்பாா்கள். இந்த கண்ணாடி பெட்டிக்குள் என்ன பொருளை வைக்க வேண்டும் என்ற தோ்வு முறை வித்தியாசமானது.
சிவன்மலை முருகன் ஏதாவது ஒரு பக்தரின் கனவில் வந்து, இன்ன பொருளை வைத்துப் பூஜை செய்ய உத்தரவிடுவதாகக் கூறப்படுகிறது. இதனால்தான் இது 'ஆண்டவன் உத்தரவு' என்று அழைக்கப்படுகிறது. கடைசியாக கடந்த ஜனவரி 14 ம் தேதி முதல் கடந்த ஞாயிற்றுக்கிழமை ( பிப்ரவரி 26 )வரை, நெற்கதிா் கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சேலம் பகுதியை சோ்ந்த விஸ்வநாத சிவாச்சாரியாா் என்ற பக்தரின் கனவில் வந்ததாக, திங்கட்கிழமை ( பிப்ரவரி 27 ) முதல் வேல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னா் கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த நெற்கதிா் நீக்கப்பட்டு தற்போது வேல் வைக்கப்பட்டுள்ளது.
சிவன்மலை கோவில் சிறப்புகளில், பிரசித்தி பெற்றது ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும். மனிதர்களுக்கு ஏற்படும் இன்னல்கள், மகிழ்ச்சிகளை முன்னதாகவே உணர்த்துவதால், மூலவருக்கு காரண மூர்த்தி என்ற பெயர் உள்ளது. சிவன்மலை ஆண்டவர் பக்தர்களின் கனவில் வந்து, தனக்கு இன்ன பொருளை வைத்து பூஜை செய்யுமாறு கூறுவார். அதன்படி, சுவாமியிடம் உத்தரவு கேட்கப்பட்டு, உத்தரவானதும் குறிப்பிட்ட பொருள் ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும். இன்னொரு பக்தரின் கனவில் வந்து அடுத்த பொருளை சுட்டிக்காட்டும் வரை, பழைய பொருளே கண்ணாடிப் பெட்டிக்குள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும்.
திருமணத் தடை, குழந்தை பாக்கியம், தொழில் மேன்மை, நோய் பாதிப்பு என அத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும் அற்புதமலையாக விளங்குகிறது. வக்கிரக சன்னதியை, ஒன்பது முறை சுற்றி, வழிபட்டு வந்தால் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், அதிலிருந்து விடுபடலாம். சனி பகவான் தனி சன்னதியிலும் எழுந்தருளியுள்ளார். காய்ச்சல் வந்தவர்கள் மிளகு ரசம் வைத்து, இங்கு வந்து பூஜை செய்து உண்டால், காய்ச்சல் நீங்கும் என்ற ஐதீகம் உள்ளது.
மற்ற திருத்தலங்கள் போலன்றி இங்கு முதல் வழிபாடு முருகப்பெருமானுக்கே. மற்ற திருத்தலங்களில் முதல் வழிபாடு பிள்ளையாருக்கே. நவக்கிரகங்கள் அனைத்தும் சூரியபகவானைப் பார்த்து நிற்கின்றன. அணையாத தீபம் எரிந்து கொண்டுள்ளது சிறப்பாகும். திருநள்ளாறு சென்று சனீஸ்வரனை தரிசிப்பதும், சூரிய நாராயணர் கோவில் சென்று சூரியனை வழிபடுவதால் ஏற்படும் சிறப்பும் இங்கு கிடைக்கும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu