மயிலாடுதுறையில் துலா உற்சவம்: துலாக்கட்டத்தில் நீராடிய பக்தர்கள்

காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடிய பக்தர்கள்.
மயிலாடுதுறையில் நடைபெறும் காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ் பெற்றதாகும். இதில் பங்கேற்க, பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிவர். ஐப்பசி மாதம், காவிரியில், கங்கை முதலான புண்ணிய நதிகள் நீராடி, தங்கள் பாவத்தை போக்கிக்கொள்வதாக ஐதீகம். ஐப்பசி மாதம், கங்கைக்கு மாயூரநாதர் சுவாமிகளும், மேதா தட்சிணாமூர்த்தியும் காட்சியளித்தாக புராணங்கள் கூறுகின்றன.
துலா உற்சவத்தை முன்னிட்டு, மயிலாடுதுறையில் பாடல் பெற்ற சிவாலயங்களில் இருந்து சுவாமி, அம்பாள் புறப்பட்டு காவிரியில் தீர்த்தவாரி வழங்குவது வழக்கம். இன்று ஐப்பசி அமாவாசையை முன்னிட்டு, மாயூரநாதர் ஆலயத்தில் இருந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் மாயூரநாதர் சுவாமியும், வதான்யேஸ்வரர் ஆலயத்தில் இருந்து வெள்ளி கைலாய வாகனத்தில் மேதாதட்சிணாமூர்த்தி சுவாமியும், முதலை வாகனத்தில் கங்கை அம்மனும் மற்றும் விஸ்வநாதர் ஆலயம், ஐயாறப்பர் ஆலயம் இவற்றில் இருந்து இறைவன் அம்பாளுடன் காவிரிக்கரையின் இரண்டு கரைகளிலும் எழுந்தருளினர்.
பின்னர், அஸ்திரதேவருக்கு இரண்டு கரைகளிலும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில், தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu