சபரிமலை பங்குனி திருவிழா: பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு
பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு (கோப்புப்படம்)
பங்குனி மாத சிறப்பு பூஜை மற்றும் 10 நாட்கள் நடைபெறும் ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 8-ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது.
மறுநாள் பங்குனி ஆராட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு கொடியை ஏற்றி வைத்து திருவிழாவை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து விழா நாட்களில் தினமும் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்தநிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. தொடர்ந்து வழக்கமான பூஜைகளுக்கு பிறகு மாலையில் கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறும். 19-ம் தேதி இரவு கோவில் நடை அடைக்கப்படும்.
தற்போது முன்பதிவு செய்யும் பக்தர்கள் அனைவருக்கும் தரிசன வசதி செய்யப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து சபரிமலை தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இன்று நடைபெறும் ஆராட்டு நிகழ்ச்சியில் பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என்பதால் பம்பை, சன்னிதானத்தில் பக்தர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu