எதிர்மறை சக்திகளை விரட்டும் எலுமிச்சை பழம்; அற்புத சக்தியை தெரிந்து கொள்வோமா?

எதிர்மறை சக்திகளை விரட்டும் எலுமிச்சை பழம்; அற்புத சக்தியை தெரிந்து கொள்வோமா?
X

பிரத்தியங்கிரா தேவி கோயில் நிர்வாகி சீனிவாச சித்தர்.

எதிர்மறை சக்திகளை விரட்டும் எலுமிச்சை பழத்தின் அற்புத சக்தி குறித்து தூத்துக்குடி பிரத்தியங்கிரா தேவி கோயில் நிர்வாகி சீனிவாச சித்தர் விளக்கம் அளித்துள்ளார்.

ஆன்மிகத்தில் எலுமிச்சை பழம் பிரதான பங்காற்றும். ஆன்மீகவாதிகள் எலுமிச்சம்பழத்தை தேவகனி என்று அழைப்பார்கள். முக்கனிகளான மா, பலா, வாழைகளுக்கு இல்லாத சிறப்பு எலுமிச்சைக்கு ஆன்மிகத்தில் உள்ளது. எலுமிச்சை பழத்தின் அற்புத சக்திகள் குறித்து தூத்துக்குடி அய்யனடைப்பு பிரத்தியங்கிராதேவி கோயில் நிர்வாகி சீனிவாச சித்தர் அளித்துள்ள விளக்கம் இதோ:

முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தில் வண்டு குற்றம் உண்டு, பலாவில் வியர்வை குற்றம் உண்டு, வாழையில் புள்ளி குற்றம் உண்டு, ஆனால் எலுமிச்சை மட்டும் எந்த குற்றத்திற்கும் உடன்படவில்லை என்று முன்னோர்கள் எலுமிச்சையை தேவகனி என்று பெயரிட்டுள்ளார்கள், இது மற்ற கனிகளைக் காட்டிலும் மனித எண்ணங்களை ஈர்க்கும் சக்தி அதிகம் கொண்டது என்பதால் சூலாயுதத்தில் எலுமிச்சை குத்தப்பட்டிருக்கும், எலுமிச்சை அம்மனுக்கு உரித்தானதாகும். இயல்பாகவே தெய்வீக சக்திகளையும், மந்திரங்களைத் தேக்கி வைத்துக்கொள்ளும் தன்மையையும் பெற்றது.

தெய்வ வழிபாட்டில் கனிமாலை சாத்தும் வழக்கம் உள்ளது. கனிமாலை என்றால் அது எலுமிச்சம் பழ மாலையையே குறிக்கும். துர்கை, பத்ரகாளி, மாரியம்மன், நடராஜர், பைரவர் போன்ற தெய்வங்களைப் பூஜிக்கும் போது எலுமிச்சை மாலை சாத்துவார்கள். இந்த மாலையைத் தயாரிப்பவர்கள் ஒரே அளவிலான நல்ல நிறமுள்ள பழங்களை மாலையாகக் கோர்க்க வேண்டும். எலுமிச்சம்பழங்களின் எண்ணிக்கை 108, 54, 45, 18 என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும். பழங்கள் காயாகவோ அல்லது மிகவும் பழுத்த நிலையிலோ இருந்தால் அவற்றைத் தவிர்ப்பது நல்லது.

பிரத்தியங்கிராதேவி, மாரியம்மன், இசக்கிஅம்மன், பேச்சி அம்மன், துர்கை அம்மன், காளி, பைரவர், சுடலை போன்ற உக்கிரமான தெய்வங்களுக்கு கனிமாலை சாத்தும் போது, அந்தத் தெய்வங்களைக் குளிர்விக்க தயிர்சாதம், பானகம் நிவேதனம் செய்ய வேண்டும், கூழ் வார்த்தும் பக்தர்களுக்குக் கொடுக்கலாம். நீண்ட நாள் தடைப்பட்ட செயல்கள் கனிமாலை சாத்தி வழிபாடு செய்தால் கைகூடும் என்பது நம்பிக்கை.

சுவாமி அம்பாளுக்கு அணிவிக்கப்படும் எலுமிச்சை பழம் குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு எலுமிச்சை சாற்றைப் பிரசாதமாகக் பருகினால் கர்ப்பம் தரிப்பர் என்பது ஐதீகம். பேய் பிசாசு மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூட, நேர்மறை ஆற்றல், எதிர்மறை ஆற்றல் குறித்த நம்பிக்கையை உண்மையில்லை என்று சொல்லமாட்டார்கள், ஏனென்றால் விஞ்ஞான ரீதியாக இத்தகைய ஆற்றல்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது,

ஒருவரது வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் அதிகம் இருந்தால், அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு அடிக்கடி உடல்நல குறைபாடு ஏற்படும். உறவுகளின் இடையில் பல பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். அந்த வீட்டில் செல்வம் நிலைக்காது. எனவே எதிர்மறை ஆற்றலைக் கண்டறிந்து அதை வெளியேற்ற வேண்டும். ஒரு வீட்டில் தீய சக்திகளான எதிர்மறை ஆற்றல் உள்ளதா என்பதை உறுதி செய்ய, மூன்று பச்சை எலுமிச்சைப் பழங்கள் போதும்.

மூன்று எலுமிச்சைப் பழத்தை எடுத்து இரண்டாக வெட்டி நமது வீட்டின் பல்வேறு பகுதியில் வைக்க வேண்டும். அப்படி வைத்த பச்சை எலுமிச்சை மஞ்சள், கருப்பு நிறத்தில் மாறினால், அதைத் தூக்கி எறிந்துவிட்டு, மீண்டும் புதிய பச்சை எலுமிச்சையை வைக்க வேண்டும். மழை நீரில் எலுமிச்சை பழத்தின் தோலைக் கொதிக்க வைத்து, வீட்டில் தெளிக்க வேண்டும். இதனால் கெட்ட சக்திகள் அனைத்தும் அகலும்.

ஒரு பீங்கான் கூடையில் 9 எலுமிச்சை பழங்களை ப்ரிட்ஜில் வைக்க வேண்டும். அப்படி வைக்கும் போது 8 எலுமிச்சையை வைத்து, நடுவே ஒரு எலுமிச்சை வைத்தால் நமது வீட்டில் செல்வவளம் அதிகரிக்கும். அன்றாடம் வேலை செய்யும் இடம் அல்லது படிக்கும் இடங்களில் உள்ள மேஜையின் மீது 3 எலுமிச்சை பழத்தை வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. அதிலும் ஒரு கண்ணாடி கிண்ணத்தில் 3 எலுமிச்சையை வைத்து, வீட்டில் உள்ள மேஜையில் வைத்தால், உறவுகள் பலப்படும்.

வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, ஒரு பச்சை எலுமிச்சையை பாக்கெட் பையில் வைத்துக் கொண்டு சென்று வந்ததும் அந்த எலுமிச்சையைப் பார்க்கும் போது, அது நன்கு காய்ந்திருந்தால், உங்களை நோக்கி அதிக எதிர்மறை ஆற்றல் வந்துள்ளது என்று அர்த்தமாகும். நமது வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளை வெளியேற்ற, ஒரு எலுமிச்சையை 4 பகுதிகளாக அறுத்து, உப்பு பரப்பிய தட்டின் நடுவே வைத்து, கட்டிலுக்கு அடியில் வைத்து, மறுநாள் காலையில் அந்த எலுமிச்சையைக் கையால் தொடாமல், ஒரு பிளாஸ்டிக் உறையில் உப்புடன் சேர்த்துப் போட்டுத் தூக்கி எறிந்து விட வேண்டும். இந்த முறைகளைப் பின்பற்றும் போது, வீட்டில் உள்ள கெட்ட சக்திகள் முழுமையாக நீங்கி வளம்பெறலாம்.

ஆன்மீக ரீதியாக நார்த்தை மரம், எலுமிச்சை மரம், பலா மரம், மா மரம், வாழை மரம், தென்னை மரம் போன்றவை வீட்டில் வளர்ந்தால், தீய சக்திகள் வீட்டினுள் புகாமல் அவைகளை இந்த மரங்கள் தடுத்துவிடும் ஆற்றல் கொண்டது. அதனால் இந்த மரங்களை வீட்டில் வளர்க்கலாம் என சீனிவாச சித்தர் தெரிவித்துள்ளார்.

Next Story
ai in future agriculture