kanda sasti kavasam - கந்த சஷ்டி கவசம் பிறந்த தலம்.. பிரசித்திபெற்ற சென்னிமலை முருகன் கோயில்

kanda sasti kavasam - கந்த சஷ்டி கவசம் பிறந்த தலம்.. பிரசித்திபெற்ற  சென்னிமலை முருகன் கோயில்
kanda sasti kavasam - கந்த சஷ்டி கவசம் பிறந்த தலமாக சென்னிமலை முருகன் கோயில் போற்றப்படுகிறது.

kanda sasti kavasam -ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும். இந்த கோயிலில் தான் கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நொய்யல் ஆற்றங்கரையில் உள்ள கொடுமணல் கிராமத்தில் பெரும் வெளிர் இனத்தவர் வாழ்ந்து வந்தனர். இவர்கள் பண்ணையக்காரர்களிடம் மாடு மேய்க்கும் வேலையைப் பார்த்து வந்தனர். ஒரு பசுவின் மடியில் தினமும் பால் இல்லாமல் இருந்ததை வேலையால் ஒருவர் கவனித்து பண்ணையாரிடம் கூறியுள்ளார்.

மாடு ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று பால் முழுவதையும் தானாகவே சொரியவிட்டதைப் பண்ணையார் கவனித்துள்ளார். அந்த இடத்தை தோண்டி பார்த்தபோது ஒரு சிலை கிடைத்துள்ளது. முகம் அழகாக இருந்தாலும் இடுப்புக்குக் கீழ் சரியான வேலைப்பாடின்றி இருந்துள்ளது.

இதனை முழுமைப் படுத்துவதற்காக அப்பகுதியில் உள்ள சிற்பியைக் கொண்டு உளியால் வேலை செய்யத் தொடங்கியுள்ளனர். உளிப்பட்டவுடன் அந்த சிலையில் இருந்து ரத்தம் வடிந்ததால், உடனடியாக வேலையை நிறுத்தி விட்டனர். ஆண்டவர் அப்படியே இருக்க வேண்டும் எனப் பிரியப்படுகிறார் என நினைத்து சென்னிமலையின் மேல் வைத்து பிரதிஷ்டை செய்துள்ளனர். அவருக்குத் தண்டாயுதபாணி எனப் பெயரும் சூட்டியுள்ளனர்.

இந்த கோயிலில் முதலில் மூலவர் முருகனுக்கு நைவேத்திய பூஜை முடிந்த பின்பு சன்னதியில் வீற்றிருக்கும் விநாயகருக்குப் பூஜை செய்யப்படும். இந்த கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவுக்கு எனத் தனி தேர் உள்ளது. சென்னி மலையிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் நொய்யல் ஆறு ஓடுகிறது. கோயிலின் தென்புறத்தில் உள்ள மாமாங்க தீர்த்தம் கோடைக்காலத்திலும் வற்றாது இருக்கும் எனக் கூறப்படுகிறது.

கந்த சஷ்டி கவசம்:

முருக பக்தர்கள் மனம் உருகிப் பாடும் கந்த சஷ்டி கவசத்தைப் பாலன் தேவராய சுவாமிகள் என்பவர் இயற்றினார். இவரிடம் கந்த சஷ்டி கவசத்தை அரங்கேற்றம் செய்ய சென்னிமலை தான் சரியான இடம் என முருகன் உணர்த்தியுள்ளார். அதன்படி அவர் அங்கே வந்து அரங்கேற்றினார் எனக் கூறப்படுகிறது. அதன் காரணமாக இந்த தலம் கந்தசஷ்டி பிறந்த தலமாகப் போற்றப்படுகிறது.

Tags

Next Story