/* */

Achan Temple- குழந்தை பாக்கியம் வரம் தரும் அச்சன்கோவில்

Achan Temple- தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதியில், அச்சன் கோவில் அமைந்துள்ளது.

HIGHLIGHTS

Achan Temple- குழந்தை பாக்கியம் வரம் தரும் அச்சன்கோவில்
X

 Achan Temple- அச்சன்கோவில் முன்பக்க தோற்றம் (கோப்பு படம்)

Achan Temple, Child, Blessing- கார்த்திகை மாதம் பிறந்தாலே 'சுவாமியே சரணம் ஐயப்பா' என்ற சரண கோஷம் ஊர் தோறும், வீடு தோறும் கேட்கும். அனைத்து ஊர்களிலும் ஐயப்ப சுவாமிக்கு மாலை அணிந்த பக்தர்கள், கருப்பு மற்றும் காவி உடை அணிந்து செல்வதையும் அதிக அளவில் காணலாம். கார்த்திகை, மார்கழி மாதங்களில் எங்கு பார்த்தாலும் ஐயப்ப பூஜைகளும், பஜனைகளும் நடைபெறும். அந்த அளவிற்கு சுவாமி ஐயப்பன் மீது பக்தர்கள் பக்தி கொண்டு மாலை அணிந்து, சபரிமலைக்கு சென்று ஐயப்பனை வழிபட்டு வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் முருகப்பெருமானுக்கு திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை, திருத்தணி என்று அறுபடை வீடுகள் இருப்பது போல், ஐயப்ப சுவாமிக்கும் கேரளாவில் ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழா, பந்தளம், எரிமேலி, சபரிமலை என அறுபடை வீடுகள் உள்ளன. குளத்துப்புழாவில் பாலகனாகவும், ஆரியங்காவில் பூரண-புஷ்கலையுடன் அய்யனாகவும், அச்சன்கோவிலில் அரசனாகவும், எரிமேலியில் சாஸ்தாவாகவும், சபரிமலையில் ஐயப்பனாகவும் இருந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

சபரிமலைக்கு மாலை அணிந்து செல்கின்ற பக்தர்கள், ஐயப்பனின் இந்த ஆறு கோவில்களுக்கும், தமிழகத்தில் பாபநாசம் மலையில் காரையாற்றில் உள்ள சொரிமுத்து அய்யனார் உள்ளிட்ட பல்வேறு கோவிலுக்கும் சென்று விட்டு சபரிமலை செல்வது வழக்கம்.

ஐயப்பனின் அறுபடை வீடுகளில் அரசனாக இருந்து ஆட்சி செய்வது, அச்சன்கோவில் திருத்தலமாகும். இந்த அச்சன் கோவில் தர்மசாஸ்தா, மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒருவரான பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். அச்சன் கோவில் திருக்கோவிலானது, தமிழக எல்லையில் தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதியில் அமைந்துள்ளது.


செங்கோட்டை, பண்பொழி, மேக்கரை வழியாக காட்டுப்பகுதியில் சென்றால் அச்சன்கோவில் செல்லும் வழியில் கோட்டைவாசல் கருப்பசாமி கோவில் உள்ளது. அச்சன்கோவில் செல்லும் பக்தர்கள் இந்த கோவிலில் வழிபட்ட பின்னரே அச்சன்கோவில் செல்வார்கள். கோவிலுக்கு அருகே பாலருவியும், அச்சன்கோவில் ஆறும் உள்ளது.

அச்சன்கோவிலில் பூரண - புஷ்கலையுடன் தர்மசாஸ்தா மூலவராக உள்ளார். விநாயகர், முருகர், நாகராஜன், நாகக்கன்னி, குருவாயூரப்பன், வனதேவதைகளும் உள்ளன. கோவிலுக்கு எதிரே கருப்பசாமி கோவில் இருக்கிறது. தர்மதாஸ்தா சுவாமிக்குரிய நகைகள் எல்லாம் புனலூரில் அரசு கருவூலத்தில் உள்ளன. இந்த நகைகள் அனைத்தும், மண்டல பூஜையின் போது கோவிலுக்கு கொண்டு வந்து சுவாமிக்கு அணிவிக்கப்படும்.

இந்த தர்மசாஸ்தா கோவிலுக்கு ஒரு வாள் உண்டு. காந்த மலைப்பகுதியில் இருந்து இறைவனே இதை வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த வாள் இடத்துக்கு இடம், நிறம், எடை மாறும் அதிசயவாள் என்று சொல்லப்படுகிறது.

சுவாமி தர்மசாஸ்தா இங்கே அரசனாகவும், ஆண்டவனாகவும் இருப்பதால், அவரிடம் வைக்கின்ற கோரிக்கைகள் விரைவில் நிறைவேறும் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.

குழந்தை இல்லாத தம்பதியர்கள் சுவாமியை வழிபட்டு நாகராஜா கோவில் வளாகத்தில் உள்ள மரத்தில் முந்தானை சேலையை கிழித்து தொட்டில் கட்டி ஆட்டினால், மறு ஆண்டுக்குள் குழந்தை பாக்கியம் கிடைத்து வீட்டில் தொட்டிலாடும் என்பது அவர்களின் நம்பிக்கையாகும்.

நாக தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள நாகராஜா கோவிலில் வந்து வழிபடுவார்கள். அங்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்த வீணை வாசிப்போர் தங்கள் கையில் வைத்திருக்கும் வீணையை இசைத்து நாகராஜன் பற்றி பாடல்களை பாடினாலும், தோஷம் உள்ளவர்களின் ராசி, நட்சத்திரம் பற்றி பாடினாலும் தோஷம் நீங்குவதாக கூறப்படுகிறது.


இதுகுறித்து அப்பகுதி பக்தர்கள் கூறுகையில், `அச்சன்கோவில் வனப்பகுதியாகும். இந்த கோவிலில் உள்ள தர்மசாஸ்தா அரசனாகவும், மருத்துவராகவும் இருந்து மக்களை பாதுகாத்து வருகிறார். அவருடைய கையில் வைத்துள்ள வெள்ளை சந்தனத்தையும், தண்ணீரையும் பாம்பு கடித்தவர்களுக்கு கொடுத்து உயிரை காப்பாற்றி வருகிறார். இந்த சிலை பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இந்த சிலையை வடித்த சிற்பி தர்மசாஸ்தாவின் கட்டளைப்படி அந்த மலைப்பகுதியில் உள்ள ராஜநாகத்தின் விஷத்தை போக்கும் மருந்தை எடுத்து வைத்து சிலையை செதுக்கி உள்ளார். சிலையை செதுக்கிய இரும்பு உளியை தண்ணீரில் தோய்த்து அடிப்பதற்கு பதிலாக அந்த மருந்தில் நனைத்து செதுக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் சிலையில் சுவாமிக்கு அபிஷேகம் செய்த தண்ணீரும், வெள்ளை சந்தனமும் அப்படியே இருக்கும். பாம்பு கடித்தவருக்கு அந்த தண்ணீரையும், சந்தனத்தையும் கொடுத்தவுடன் குணம் கிடைத்து விடுகிறது. நடை மூடிய பிறகும் எந்த நேரமாக இருந்தாலும் கோவில் மணியை அடித்த உடனே பூசாரி வந்து நடையை திறந்து பரிகாரமாய் இந்த சிகிச்சை அளிக்கிறார்' என்றார்கள்.

இத்தனை சிறப்பு மிக்க அச்சன்கோவிலில் மார்கழி மாதம் நடைபெறுகின்ற மண்டல பூஜை வருகிற 16-ம் தேதி (சனிக்கிழமை) தொடங்குகிறது. அன்றைய தினமே ஆபரணப்பெட்டி ஊர்வலம் நடைபெறும். தொடர்ந்து 17-ம் தேதி கொடியேற்றம், 25-ம் தேதி காலை 11 மணிக்கு தேரோட்டம், 26-ம் தேதி ஆராட்டும் நடக்கிறது.


அச்சன்கோவிலுக்கு சொந்தமான வயல்களில் தனியாக நெல் பயிரிடப்பட்டு அந்த நெற்கதிர்களை அறுவடை செய்து அச்சன்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பின்னர் சபரிமலையில் நடைபெறும் நிறைப்புத்தரிசி விழாவிற்காக விரதம் இருந்த 51 பக்தர் களுடன், 51 நெற்கதிர் கட்டுகளை சபரிமலை கோவில் நிர்வாகத்தினா் சபரிமலைக்கு எடுத்துச் செல்வார்கள்.

அச்சன்கோவில் தர்மசாஸ்தா கோவிலில் தினமும் அதிகாலை 4 மணிக்கு நடை திறந்து பூஜைகள் நடக்கும். மதியம் 12 மணிக்கு நடை அடைக்கப்படும். மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை கோவில் திறந்திருக்கும். ஆண்டு தோறும் மார்கழி மாதத்தில் மண்டல பூஜை தேரோட்டம் நடைபெறும். ஐயப்பன் கோவில்களில் தேரோட்டம் நடைபெறும் ஒரே கோவில் இந்த அச்சன்கோவில் ஆகும்.

குறிப்பு; செய்தியில் இடம்பெற்றவை அனைத்தும் கோப்பு படங்கள்.

Updated On: 15 Dec 2023 10:06 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது