ஒரு நாள் ட்ரிப் கேரளாவுக்கு போறீங்களா...? அப்படியே தேக்கடிக்கு ஒரு விசிட் அடிங்க ப்ரோ!
Thekkady Tourist Places- தேக்கடியில் மேகங்கள் மலை முகடுகளில் முட்டி விளையாடும் அழகிய காட்சி ( கோப்பு படம்)
Thekkady Tourist Places- சுற்றுலா என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் உற்சாகப்படுத்தக்கூடிய ஒரு விஷயம். அதிலும் கோடை விடுமுறையில் குடும்பத்துடன் செல்வது என்பது மன ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்ததாக இருக்கும். வாரத்தின் 7 நாட்களும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் சுற்றுலா திட்டம் போடுவது என்பது மிகுந்த சிரமத்தைத்தரும். இந்த சூழலில் நீங்கள் உங்களை ஏதாவது ஒரு நாளில் ப்ரீயாக்கிக் கொண்டு சுற்றுலா செல்லத் திட்டமிடுகிறீர்களா? அதிலும் பட்ஜெட் விலையில் செல்ல ஏதாவது திட்டம் இருந்தால், கொஞ்சம் கேரள மாநிலத்திலுள்ள தேக்கடிக்கு ஒரு ட்ரிப் பண்ணுங்க. அந்தளவிற்கு மனதை அமைதிப்படுத்தும் சுற்றுலா தலங்கள் உள்ளது.
மனதிற்கு இதமளிக்கும் தேக்கடி சுற்றுலா:
தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியாகவும், கேரள மாநிலத்தின் முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது இடுக்கி மாநிலத்தில் உள்ள தேக்கடி. பசுமைச்சூழல் நிறைந்த மலை பிரதேசகங்களுக்கு இடையே அமைந்துள்ள இந்த பகுதிக்குச் சென்றாலே நம்மை அறியாமல் மனதிற்கு இதமான சூழலைத் தரக்கூடும். ஒரு நாள் மட்டும் போதும் தேக்கடியில் உள்ள முக்கியமான இடங்களைச் சுற்றிப்பார்க்க முடியும்.
ஆம் தேக்கடிக்குச் செல்ல திட்டம் இருக்கிறது என்றால் அதிகாலையில் உங்களது பயணத்தைத் தொடங்க வேண்டும். மதுரையிலிருந்து செல்கிறீர்கள் என்றால் 4 மணி நேரம் எடுக்கும். எனவே அதிகாலையில் அல்லது நள்ளிரவு உங்களது பயணத்தைத் தொடங்குங்கள். முடிந்தவரை காலையில் 6 மணிக்குத் தேக்கடிக்குச் செல்வது நல்லது.
தேக்கடி படகு சவாரி:
அதிகாலையில் தேக்கடியை நீங்கள் அடைந்ததும் காலை 7.30 மணிக்கு உங்களது படகு சவாரியைத் தொடங்கவும். சுமார் 15 கிலோ மீட்டர் நீளமுள்ள ஏரியில் பயணம் செய்து வனத்தையும், வன விலங்குகளையும் கண்டு ரசிப்பது உங்களது மனதை இதமாக்கும். யானை,புலி, மான் போன்ற வன விலங்குகள் தண்ணீர் குடிக்க வருவதைப் பார்ப்பது குழந்தைகளை மகிழ்ச்சியாக்கும். காலை 7.30, மதியம் 2.30, மாலை 4.30 என மூன்று வேளைகளில் படகு சவாரி உள்ளது. தேக்கடிக்கு மிகவும் பிரசித்திப் பெற்ற இந்த இடத்திற்குச் செல்ல வேண்டும் என்று நினைத்தால் ஆன்லைனில் புக்கிங் செய்துக் கொள்வது நல்லது.
தேக்கடி ரோஸ் பார்க்:
தேக்கடி படகு சவாரிக்கு அடுத்தப்படியாக நீங்கள் ரோஸ் பார்க்கிற்கு நீங்கள் செல்லலாம். நீங்கள் நினைப்பது விதவிதமான பூக்கள் மட்டும் இடம் பெற்றிருப்பதில்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் ஜிப்லைன், கயிற்றில் சைக்கிள் ஓட்டுதல் போன்ற அட்வென்சர்ஸ் கேம்கள் அதிகளவில் உள்ளது.
குழந்தைகளுக்கு ரூ. 350 க்கு டிக்கெட் எடுத்தால் போதும் அனைத்து விளையாட்டுகளையும் விளையாடிக் கொள்ளலாம். அதே போன்று பெரியவர்கள் விளையாட வேண்டும் என்று நினைத்தால் ரூ. 600 டிக்கெட் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை எதுவும் விளையாடவில்லையென்றால் நுழைவுக் கட்டணம் ரூ. 120 மட்டும் தான். இந்த இரண்டு இடங்களுக்குச் சென்று வந்தாலே ஒரு நாள் ட்ரிப் ஓவர். ஒருவேளை உங்களுக்குக் கொஞ்சம் நேரம் இருந்தால் யானை சவாரி செய்யலாம்.
குறிப்பு: தமிழகத்திலிருந்து கேரள மாநிலத்திற்குச் செல்வதற்கு ஆன்லைன் வாயிலாக கார், வேன்களை ரிஜிஸ்ட்ர் செய்துக்கொள்ள வேண்டும். சொந்த வாகனங்களுக்குத் தேவையில்லை. வாடகை வாகனங்களுக்குக் கட்டாயம் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu