செல்ஃபி மோகம் - 140 அடி பள்ளத்தில் விழுந்தவரை மீட்ட காவல்துறை
கர்நாடகாவில் நீர்வீழ்ச்சி அருகில் நின்று கொண்டு செல்ஃபி எடுக்கும்போது தவறி 140 அடி பள்ளத்தில் விழுந்தவர் உயிர் தப்பினார்
HIGHLIGHTS
கர்நாடகா மாநிலம், பெலகாவி மாவட்டத்திலுள்ள கோகாக் நீர் வீழ்ச்சிக்கு பிரதீப் சாகர் என்ற இளைஞர் நண்பர்களுடன் சென்றுள்ளார்.
அப்போது அந்த இளைஞர் நீர்வீழ்ச்சி அருகே பாறையில் நின்று கொண்டு தன்னுடைய செல்போனில் செல்ஃபி எடுக்கும்போது கால்தவறி கீழே விழுந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த நண்பர்கள் உடனடியாக கோகாக் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பிரதீப்பைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் தேடியும் கிடைக்காததால் பிரதீப் இறந்திருக்கலாம் எனக் கருதி தேடுதல் பணி நிறுத்தப்பட்டது.
யாரும் எதிர்பாராத விதமாக பிரதீப் அதிகாலை 4 மணியளவில் அவரது நண்பர்களைத்தொடர்பு கொண்டு, தான் உயிருடன் இருப்பதாகத் தெரிவித்து, தனது இருப்பிடத்தைத் தெரிவித்தார். உடனடியாக அவரது நண்பர்கள் சமூக ஆர்வலர் அயூப்கானிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து நீர்வீழ்ச்சிக்கு அருகில் 140 அடி பள்ளத்தில் சிக்கியிருந்த பிரதீப்பை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.