குடியரசுத்தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு வேட்புமனு தாக்கல்

குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்புமனுவை நாடாளுமன்ற செயலரிடம் தாக்கல் செய்யும் முர்மு. அருகில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள்.
இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவதால், புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்க அடுத்த மாதம் 18ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, இன்று வேட்புமனு தாக்கல் செய்வதற்காக நாடாளுமன்ற வளாகத்திற்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோருடன் வருகை தந்தார். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பு, நாடாளுமன்ற வளாகத்தில், மகாத்மா காந்தி, அம்பேத்கர் சிலைகளுக்கு திரெளபதி முர்மு மரியாதை செலுத்தினார்.
பின்னர் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, பா.ஜ., தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பா.ஜ., முதல்வர்கள் மற்றும் அ.தி.மு.க சார்பில் ஓ.பன்னீர்செல்வம், எம்.பி.,க்கள் ரவீந்திரநாத், தம்பிதுரை ஆகியோர் முன்னிலையில், திரெளபதி முர்மு, தனது வேட்புமனுவை நாடாளுமன்ற செயலரிடம் தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கலின் போது, கூட்டணி கட்சி என்னும் முறையில், பிரதமருக்கு பின் வரிசையில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அமர்ந்திருந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu