ஆயுஷ் அமைச்சகம் முதல் ஸ்டார்ட் அப் மாநாடு: சித்த மருத்துவ பணிகள் அதிகரிக்குமா?
மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் மாணவர்களுக்கான பணி வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறது.
HIGHLIGHTS
மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் மாணவர்களுக்கான பணி வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறது. மாணவர்களை சிறந்த முறையில் பணிகளில் ஈடுபடுத்துவதற்கும், அவர்களுக்கான பணி வாய்ப்புகளை ஆயுஷ் அமைப்புகளில் கட்டமைப்பதற்கும் தேவையான வழிகளை ஆயுஷ் அமைச்சகம் ஆராய்ந்து வருகிறது.
இதன் தொடக்கமாக, 'ஆயுஷ் அமைப்புகளில் பலதரப்பட்ட மற்றும் சிறந்த பணி வழிகள்- வட கிழக்கு மாநிலங்களில் கல்வி, தொழில்முனைதல் மற்றும் வேலை வாய்ப்பு மீது கவனம்' எனும் தலைப்பிலான மாநாட்டை ஆயுஷ் அமைச்சகம் நடத்துகிறது.
அசாமில் உள்ள கவுகாத்தியில் செப்டம்பர் 10 அன்று நடைபெறவுள்ள இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ளவுள்ள மத்திய ஆயுஷ் அமைச்சர் சர்பானந்த சோனோவால், ஆயுஷ் நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி அமைப்புகளின் தலைவர்களோடு இணைந்து மாணவர்களுடன் நேரடியாக உரையாட உள்ளனர்.
சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கான மத்திய குழு, சென்னையின் தலைமை இயக்குநர் பேராசிரியர் டாக்டர் கனகவல்லி உள்ளிட்ட நாடு முழுவதுமுள்ள ஆயுஷ் அமைப்புகளின் தலைவர்கள் இதில் பங்கேற்கிறார்கள்.
மாணவர்களின் பணி வாய்ப்புகள் மற்றும் இத்துறையில் ஸ்டார்ட் அப்புகளுக்கான சாத்தியக்கூறுகள் குறித்த இத்தகைய மாநாடு ஒன்றை ஆயுஷ் அமைச்சகம் நடத்துவது இதுவே முதல் முறை ஆகும்.