வேட்டையாடிய புலியின் பல்.. மகாராஷ்டிரா எம்எல்ஏவின் வீடியோ வைரல்

வேட்டையாடிய புலியின் பல்.. மகாராஷ்டிரா எம்எல்ஏவின் வீடியோ வைரல்
X
மகாராஷ்டிரா சட்டமன்ற உறுப்பினர், தான் வேட்டையாடிய புலியின் பல் ஒன்றை பெருமையாகக் காண்பிக்கும் வீடியோ வைரலாகி உள்ளது.

மகாராஷ்டிராவை சேர்ந்த சஞ்சய் கைக்வாட் என்ற சட்டமன்ற உறுப்பினர், தான் வேட்டையாடிய புலியின் பல் ஒன்றை பெருமையாகக் காண்பிக்கும் வீடியோ வைரலாகி உள்ளது. அந்தப் பல்லை 1987-ல் தான் வேட்டையாடியதாக அவர் கூறுகிறார். இவர், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா கட்சியைச் சேர்ந்தவர்.

சமூக வலைதளங்களில் இந்த காணொளி பரவி, சஞ்சய் கைக்வாட் கழுத்தில் புலியின் பல் ஒன்று அணிகலனாகத் தொங்குவது தெரிகிறது. அந்தப் புலியின் உடல் பாகம் குறித்து கேள்வி எழுப்பப்படுகையில், “இது புலியின் பல். 1987-ல் நான் தான் இதை வேட்டையாடி, இந்தப் பல்லை எடுத்தேன்” என்கிறார் அவர்.

இந்த உரையாடல், சிவாஜி மகாராஜின் பிறந்தநாளான சிவ ஜெயந்தியன்று (தற்போது திங்கள்கிழமை) பதிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இந்த காணொளியை உத்தவ் தாக்கரே பிரிவைச் சேர்ந்த ‘சாமானா’ பத்திரிகையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது.

1987-க்கு முன்பே, இந்தியாவில் புலி வேட்டை தடை செய்யப்பட்டு விட்டது. 1972-ல் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம் நடைமுறைக்கு வந்ததில் இருந்தே புலி வேட்டைக்கு அதிகாரப்பூர்வ தடை உள்ளது. சஞ்சய் கைக்வாட்டின் கருத்தைப் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும், அவர் தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை என்று செய்தி நிறுவனமான பிடிஐ தெரிவிக்கிறது.

வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம் 1972

சிவப்புப்பட்டியலில் (IUCN Red List of Threatened Species) புலிகள் அழிந்து வரும் உயிரினங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. 1972-ம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்ட பின்னரே, புலி வேட்டைக்கு அதிகாரப்பூர்வமாக தடை வந்தது.

இந்தியப் புலி, வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972-ன் அட்டவணை I-இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சட்டம், புலி வேட்டை, அவற்றின் தோல், எலும்புகள் மற்றும் உடல் பாகங்களை வைத்திருப்பது ஆகியவற்றுக்கு எதிராக பாதுகாப்பு வழங்குகிறது. இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு மூன்று முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ஐம்பதாயிரம் முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் (முதல் குற்றத்திற்கு). அடுத்தடுத்த குற்றங்களுக்கு குறைந்தபட்சம் ஏழு ஆண்டு சிறைத்தண்டனையும் ஐந்து லட்சம் முதல் ஐம்பது லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

Next Story