லக்கிம்பூர் கேரி வன்முறை: இணையமைச்சர் மகன் ஆஜர்
உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில், சர்ச்சைக்குரிய 3 விவசாய சட்டங்களை திரும்ப பெறக்கோரி போராடிய விவசாயிகள் மீது கார் ஏற்றி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் இரண்டு விவசாயிகள் கொல்லப்பட்டனர். அதன்பின்னர் நடந்த வன்முறை சம்பவங்களில் உயிரிழப்பு 8 ஆக உயர்ந்துள்ளது. இந்த வழக்கில் உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா பெயரும் அடிபடுகிறது. போலீசார் அவரை தேடிவந்தனர்.
இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்திவருகிறது. இந்த வழக்கில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரப் பிரதேச அரசுக்கு உத்தரவிட்டது. ஆஷிஷ் மிஸ்ராவை கைது செய்யாதது ஏன் என்று உச்சநீதிமன்றம் நேற்று கேள்வி எழுப்பி இருந்தது. கொலை வழக்கில் குற்றவாளியை கைது செய்யாமல் இருந்ததற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது. குற்றவாளிகளை கைது செய்யாமல் கெஞ்சுவது ஏன்? வழக்கில் சாதாரண நபர் ஒருவர் பெயர் இடம்பெற்றிருந்தால் இவ்வாறுதான் நடந்து கொள்வீர்களா? என சரமாரி கேள்வியெழுப்பியது.
இதையடுத்து ஆஷிஷ் மிஸ்ரா மீதான பிடி இறுகியது. இந்நிலையில் லக்னோவில் உள்ள குற்றவியல் விசாரணை அலுவலகத்தில் ஆஷிஷ் மிஸ்ரா ஆஜரானார். உத்தரப் பிரதேச அரசு ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை குற்றத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu