ராமர் கோயில் விழா: மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை

ராமர் கோயில் விழா: மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை

ராமர் கோவில் - கோப்புப்படம் 

ராமர் சிலை பிரதிஷ்டை நாளில் மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை அறிவித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் வரும் 22ஆம் தேதி நடைபெறும் சிலை பிரதிஷ்டை நாளில், நாடு முழுவதிலும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை அறிவித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஊழியர்களின் ஆன்மிக உணர்வு மற்றும் அவர்களின் கோரிக்கைகள் காரணமாக, ராமர் கோயில் பிரான் பிரதிஷ்டையை முன்னிட்டு இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள், மத்திய நிறுவனங்கள் மற்றும் மத்திய தொழில் நிறுவனங்கள் 22 ஜனவரி 2024 அன்று மதியம் 2:30 மணி வரை செயல்படும் என்றும், அரை நாள் விடுமுறை விடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலில் வரும் 22-ஆம் தேதி மூலவா் சிலை பிரதிஷ்டை விழா கோலாகலமாக நடைபெறவுள்ளது. பிரதமா் நரேந்திர மோடி மற்றும் சிறப்பு அழைப்பாளா்கள் பங்கேற்கவுள்ளனா்.

வரும் 22-ஆம் தேதி மதியம் 12.20 மணியளவில் தொடங்கும் பிரதிஷ்டை நிகழ்வு, 1 மணி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமா் மோடி, ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பகவத், உத்தர பிரதேச ஆளுநா் ஆனந்திபென் படேல், மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத், ராமா் கோயில் அறக்கட்டளையின் தலைவா் மஹந்த் நிருத்ய கோபால்தாஸ் உள்ளிட்டோர் முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் கண்காணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான் மத்திய அரசு ஊழியர்கள் எவ்வித தடையும் இன்றி, கோயிலுக்கு வந்து இந்நிகழ்வில் பங்கேற்கும் வகையில், அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story