இருமொழிக் கொள்கை மட்டுமே செயல்படுத்தப்படும் - தமிழக பள்ளிக்கல்வித்துறை

இருமொழிக் கொள்கை மட்டுமே செயல்படுத்தப்படும் - தமிழக பள்ளிக்கல்வித்துறை
X
உண்மைக்கு புறம்பாக மக்களை தவறாக வழி நடத்தும் செய்திகளை நம்ப வேண்டாம் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு மாணவரும் 10ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியை கட்டாயப் பாடமாக படிக்க வேண்டும். தாய்மொழியான தமிழ் மற்றும் உலக இணைப்பு மொழியான ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கை மட்டுமே வழக்கத்தில் உள்ளது.உண்மைக்கு புறம்பாக மக்களை தவறாக வழிநடத்தும் செய்திகளை நம்ப வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழி மட்டுமே பள்ளிகளில் நடைமுறையில் இருந்து வருகின்றது. இதற்கு மாறாக மூன்றாவது மொழி அமல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்திக்கு பள்ளிக்கல்வித்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

பள்ளி பாடத்திட்டத்தில் நீண்ட காலமாக அமலில் உள்ள இருமொழிக் கொள்கையை மாற்றி மும்மொழிக் கொள்கையை புகட்டும் நடவடிக்கைகள் சத்தம் இன்றி தொடங்கியுள்ளதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

2006ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாணவரும் பத்தாம் வகுப்பு வரை தமிழ்மொழியை கட்டாயம் கற்க வேண்டும் என்ற உத்தரவு நடைமுறையில் உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் கன்னடம், தெலுங்கு, மலையாளம், உருது என தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத மாணவர்களுக்கு தமிழ் மொழியுடன் சேர்த்து அவர் தம் தாய் மொழியையும் விருப்பப்பாடமாக தேர்வு செய்து எழுதும் முறை தமிழகத்தில் பல ஆண்டுகளாக இருந்து வருவதாகவும் பள்ளிக்கல்வித்துறை தெளிவுபடுத்தியுள்ளது.

எனவே தமிழக அரசு ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ள மொழிக் கொள்கையின் அடிப்படையில் இருமொழிக் கொள்கை மட்டுமே தொடர்ந்து செயல்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மத்திய அரசு அமல்படுத்த உள்ள புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் மும்மொழி கொள்கையை நாடு முழுவதும் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அதில் மூன்றாவது மொழியாக ஹிந்தி மொழியை முன்னிலைப்படுத்த மத்திய அரசு முயற்சிப்பதாக தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இன்று நாளிதழ்களில் வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை மட்டுமே தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story