45 வயசுக்கு பிறகும் 25 வயசு மாதிரி ஆரோக்கியமாக இருக்கணுமா?- இந்த டிப்ஸ் எல்லாம் உங்களுக்குதான்...!
வயதாகி விட்டதே என்ற கவலையே, பலரை முதுமையில் தள்ளி விடுகிறது. வயது உடலுக்குத்தானே தவிர, மனதுக்கு இல்லை. ஆரோக்கியமான வாழ்க்கைச் சூழலை உருவாக்கிக் கொண்டால், எப்போதுமே மகிழ்ச்சியாக வாழ முடியும்.
HIGHLIGHTS

முதுமை என்பது சாபம் அல்ல; மிகப்பெரிய வரம். வாழும் சூட்சுமம் நீங்கள் அறிந்திருந்தால்...
எண்பது வயதானாலும், சிலர் சிறிதும் தளர்வின்றி ஆரோக்கியமாக இருப்பதை பார்த்து ஆச்சரியப்படுவோம். கலகலப்பாக பேசி, சுறுசுறுப்பாக அவர்கள் செயல்படுவதை பார்த்தால், நிச்சயம் அடடா... என்ற வியப்பை தவிர்க்க முடியாது. உதாரணமாக, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை சொல்லலாம். 50 வயது கடந்த நிலையில், அவர் நடித்த பல படங்களில், சிறிதும் வேகமும், துடிப்பும் குறையாமல் வாலிபரை போலவே தெரிவார். அதற்கு காரணம் உடல் ஆரோக்கியத்தில் அவர் காட்டிய தீவிர அக்கறையும் அதற்கேற்ப உணவு பழக்கம், உடற்பயிற்சிகளும்தான்.
நீங்கள் தொழில் சார்ந்து 'பிஸி'யான மனிதராாக இருந்தாலும், ஆரோக்கியமாக வாழ்வதிலும், அதிக கவனமாக இருக்க வேண்டும். பரபரப்பாக ஓய்வின்றி கஷ்டப்பட்டு உழைத்து, இறுதியில் ஆரோக்கியம் இழந்து சம்பாதித்த பணத்தை, மருத்துவமனையில் படுத்துக்கொண்டு லட்சக்கணக்கில் செலவழிப்பதில் எந்த பயனும் இல்லை. பணத்தை சம்பாதிப்பது போல, உடல் ஆரோக்கியத்தையும் நீண்டகாலத்துக்கு சம்பாதித்துக்கொள்வதும் மிக முக்கியம்.
உங்களது வயது 45 ஐ தொட்டு விட்டது எனில், இந்த 'டிப்ஸ்' உங்களுக்குதான்...
* தேநீரில் பால் குறைவாக சேர்த்து குடிக்கவும். அதற்கு பதிலாக, எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
* பகல் நேரத்தில், அதிக தண்ணீரும், இரவு நேரத்தில், குறைவாகவும் தண்ணீர் குடிக்கவும்.
* பகலில் 2 கப் காபிக்கு மேல் குடிப்பதை தவிர்க்கலாம்; முற்றிலும் காபியை குடிக்காமல் தவிர்ப்பது மிகவும் நல்லது.
* எண்ணெய் பலகார உணவுகளை குறைவாக சாப்பிட வேண்டும்.
* இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை, கட்டாயம் 8 மணி நேரம் துாக்கம் அவசியம்.
* குளிர்ந்த நீரில் மருந்துகளை எடுத்துக் கொள்வது கூடாது, ஆனால் சூடான நீரில், படுக்கைக்குச் செல்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன், மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மருந்துகளை உட்கொண்டு உடனடியாக படுத்து துாங்கக் கூடாது.
* மதிய வேளைகளில் ஒரு மணி நேரம் தூங்குவது, மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்; களைப்பு நீங்கி, புத்துணர்ச்சி தரும்.
* ரத்த அழுத்தம், சர்க்கரை அளவை அவ்வப்போது மருத்துவ பரிசோதனை வாயிலாக சரிபார்த்துக்கொள்வது மிக முக்கியம்.
உணவுகளில் குறைக்க வேண்டியவை
(1) உப்பு
(2) சர்க்கரை
(3) இறைச்சி மற்றும் அசைவ உணவுகள்
(4) குறிப்பாக வறுத்த, சிவப்பு இறைச்சி
(5) பால் பொருட்கள், எண்ணெய் பலகாரங்கள்
(6) மாவுச்சத்துள்ள பொருட்கள்
உணவில் அதிகரிக்க வேண்டியவை
(1) கீரைகள்/காய்கறிகள்
(2) பீன்ஸ்
(3) பழங்கள்
(4) கொட்டைகள்
மறக்க வேண்டிய விஷயங்கள்
(1) முதுமை குறித்த கவலை
(2) கடந்த காலம் குறித்த கவலை
(3) எதிர்காலம் குறித்த கவலைகள்/ வாழ்க்கை பற்றிய குறைகள்
இருக்க வேண்டிய நான்கு விஷயங்கள்
(1) உண்மையாக நேசிக்கும் நண்பர்கள்
(2) அக்கறையுள்ள குடும்பம்
(3) நேர்மறை எண்ணங்கள்
(4) வாழ்க்கையை ரசிக்கும் மனோபாவம்
ஆரோக்கியமாக வாழ ஏழு விஷயங்கள்
(1) மனதுக்கு பிடித்த பாடல்களை சத்தமாக பாடுதல்
(2) தனிமையில் அல்லது குழந்தைகளோடு நடனம் ஆடுதல்
(3) அவ்வப்போது உண்ணாவிரதம் இருப்பது
(4)மவுன விரதம் இருத்தல்
(5) புன்னகை/சிரித்தல்
(6) மலையேற்றம்/உடற்பயிற்சி செய்தல்
(7) உடல் எடையைக் குறைத்தல்
செய்ய வேண்டிய ஆறு விஷயங்கள்
(1) பசி எடுக்கும் வரை, சாப்பிட காத்திருக்க கூடாது
(2) தாகம் எடுக்கும் வரை, குடிநீர் குடிக்க காத்திருக்க கூடாது
(3) தூங்குவதற்கு, தூக்கம் வரும் வரை காத்திருக்க கூடாது
(4) சோர்வாக உணரும் வரை, ஓய்வெடுக்க காத்திருக்க கூடாது
(5) உடல்நிலை சரியில்லாமல் போகும் வரை, மருத்துவமனை பரிசோதனைக்காக செல்ல காத்திருக்க கூடாது.
குடிநீர் மகத்துவம்
* சரியான நேரத்தில் தண்ணீர் குடிப்பதால், மனித உடலில் அதன் செயல்திறனை அதிகரிக்கிறது;
* காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது, உடல் உள் உறுப்புகளை செயல்படுத்த உதவுகிறது.
* உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது, செரிமானத்திற்கு உதவுகிறது.
* குளிப்பதற்கு முன் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது, ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
* படுக்கைக்குச் செல்லும் முன் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது, பக்கவாதம் அல்லது மாரடைப்பைத் தவிர்க்கிறது.
நீங்கள் நல்லவராக வாழ சுலபமான வழி, கெட்டதை எதையும் செய்யாமல் விட்டு விடுவதுதான். அதுபோல், உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் விஷயங்களை நீங்கள் தவிர்த்து விட்டாலே, உங்களது ஆரோக்கியத்தை, உங்களது உடலே பார்த்துக்கொள்ளும். குறிப்பாக மதுப்பழக்கம், புகைப்பழக்கம் தவிர்த்தாலே, பாதி ஆரோக்கியத்தை மீட்டு விடலாம்.