ஆரோக்யத்தில் அக்கறை கொள்கிறீர்களா? முதல்ல இதைப் படியுங்க..!
ஆரோக்கியத்துக்கா
சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் அந்த வகையில் தற்போதுள்ள பரபரப்பான உலகில் நாம் அனைவரும் நம் உடல் ஆரோக்யத்தில் போதிய அக்கறை கொள்ள வேண்டும். சரி, எத்தனை பேர் நம் உடல் ஆரோக்யத்தில் அக்கறை கொண்டுள்ளோம் என்பதைப் பார்த்தால் அதன் எண்ணிக்கையானது குறைந்த அளவே காணப்படும்.
முன்னெச்சரிக்கை
நம்மில் பெரும்பாலானவர்கள் உடலில் ஏதாவது பாதிப்பு வந்தபின்னர்தான் டாக்டரிடம் செல்லும் வழக்கத்தினை கொண்டுள்ளோம். அதுவும் கிளைமாக்சில்தான் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர் பலர். அது முற்றிலும் தவறான செயலாகும்.நோயானது புதியதாக நம் உடலில் உருவாகும்போதே வழக்கத்துக்கு மாறான செயல்பாடுகள் நமக்கு தெரியும். அதாவது உதாரணமாக தலைச்சுற்றல், வயிறு வலி, இடுப்பு வலி, கைவலி, கால்வலி, கண்ணில் வித்தியாசமான பார்வை தெரிதல், சளியோடு ரத்தம் கலந்து வருதல், தொண்டை புண், உள்ளிட்ட பல சமிக்ஞைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.
இதுபோல் வழக்கத்துக்கு மாறான அறிகுறிகள் நமக்கு தோன்றும் போதே நாம் உஷாராகி உடனடியாக தக்க டாக்டரிடம் சிகிச்சைக்கு சென்று ஆலோசனை பெற்றுக்கொள்வது நலம் பயக்கும். வெள்ளம் வரும் முன் தடுப்போம் என்பது போல் நோய்கள் வரும் முன் காப்போம் என்ற பாணியில் முன்னெச்செரிக்கையாக டாக்டரிடம் சென்று பரிசோதித்தல் நலம் .
அலட்சியமே உயிரிழப்பு
நம் உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு , ஆபீசில் உடன் வேலைபார்க்கும் சக பணியாளர்களுக்கு என பல விதத்தில் உடல் நல பாதிப்பு பற்றி கேள்விபட்டிருப்போம். இதில் ஒரு சில பேர் திடீரென இறந்து போயிருக்கலாம். ஆனால் அவர் உண்மையில் திடீரென இறப்பதற்கு வாய்ப்புகள் இல்லவே இல்லை. காரணம் என்ன தெரியுமா? அவருக்கு இந்த பாதிப்பின் கோளாறுகள் ஒரு சில நாட்களுக்கு முன்னதாக நிச்சயம் தெரிந்திருக்கும். அதனை அவர் கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டியதால்தான் அந்த மரணம் நிகழ்ந்திருக்கும். கடவுளின் படைப்பில் எதனையும் விலை கொடுத்து வாங்கி விட முடியும். ஆனால் உயிர்களை மட்டும் விலைக்கு வாங்க முடியாது. எனவே யாருமே அலட்சியமாக இருந்து விடாதீர்கள். மீண்டும் ஒரு முறை சொல்கிறேன் வழக்கத்துக்கு மாறான உடல் இயக்க கோளாறுகள் இருப்பின் தாமதிக்காமல் உடனடியாக டாக்டரிடம் செல்லுங்க…
மேலும் உங்கள் ஆரோக்யத்தில் அக்கறை காட்ட முயலுங்கள் .யாரைக்கேட்டாலும் நேரம் இல்லை என்ற பதிலே ஓங்கி ஒலிக்கும். நான் துவக்கத்தில் சொன்னது போல் சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். சுவரே இல்லாவிட்டால் வரைவதற்கு இடம் ஏது? அந்த சுவர்தான் நம் உடல். அதனை நாம் கவனிக்காவிட்டால் என்ன ஆகும் சொல்லவே தேவையில்லை. எனவே இனி வரும் காலங்களில் முடிந்தவரை யாருமே நேரம் இல்லை என்று மட்டும் சொல்லவேண்டாம். முடிந்த வரை ஒரு அரைமணி நேரம் வாக்கிங் செல்லுங்கள். பின்னர் தியானம், மூச்சு பயிற்சி, யோகா உள்ளிட்ட உடலை காக்கும் உடற்பயிற்சிகளை செய்ய துவங்குங்கள்.
உடலுழைப்பு இல்லை
அக்காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் அனைவருக்கும் போதிய உடல் உழைப்பு இருந்தது. காலங்களும் மாறியது. நவீன தொழில்நுட்ப கருவிகளின் வரவால் மெஷின்களின் ஆதிக்கத்தினால் உடலுழைப்பு என்பது அறவே இல்லை. இதனால் உடல் பருமன் அதிகரித்து இன்று அனைத்து நோய்களுக்கும் ரத்தின கம்பளம் விரிக்கிறது. அதேபோல் சைக்கிள் ஓட்டினால் நம் உடலின் அனைத்து பாகங்களும் இயங்கும். அந்த சைக்கிள் இன்று பல பேரின் வீ ட்டில் தேவையற்ற பொருளாக இருக்கிறது. பற்றாக்குறைக்கு ஸ்மார்ட் போன் வந்ததில் இருந்து சொல்லவே தேவையில்லை. எதற்குமே நேரம் இல்லை என்ற நிலை வந்துவிட்டது. ஒருநாள் முழுக்க ஒரே இடத்தில் உட்கார சொன்னால் -கூட உட்கார ரெடி ஸ்மார்ட்போனோடு. எனவே முடிந்த வரை உடல் உழைப்பிற்கு நேரம் ஒதுக்குங்கள். உங்களின் தோட்டம் இருந்தால் அதில் குனிந்து நிமிர்ந்து சிறிது நேரம் வேலை செய்யுங்க,. வேலைக்கு வேலையும் உடற்பயிற்சிக்கு பயிற்சியும் ஆகிவிடும்.
எனவே முடிந்த வரை உங்கள் ஆரோக்யத்தில் போதிய அக்கறை செலுத்துங்க. இல்லாவிட்டால் நிலைமை விபரீதமாகிவிடும். நோய் முற்றிய பின்னர் ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியாக ஏறி இறங்குவதில் எந்த பலனும் இல்லை என்பதை இருக்கும்போதே உணருங்க.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu