ஒரு நாளைக்கு எவ்வளவு பால் குடிக்கலாம் என தெரியுமா? முதலில் இதனை படியுங்கள்
ஒரு நபர் நாளொன்றுக்கு எவ்வளவு பால் குடிக்கலாம் என உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.
HIGHLIGHTS

நமது உணவுப் பழக்கத்தில் தவறாமல் இடம்பெறும் ஒரு பொருள் பால். அப்படிப்பட்ட பால் பல வழிகளில் நமக்கு கிடைக்கிறது. பண்ணை பால், பாக்கெட் பால் மற்றும் அண்டை வீடுகளில் வளர்க்கப்படும் மாட்டில் இருந்து கறக்கப்படும் பால் என எத்தனையோ வழிகளில் பால் கிடைத்தாலும் அவற்றை நாம் எவ்வாறு பருக வேண்டும், எவ்வளவு பருக வேண்டும் என தெரிந்து கொள்வது அவசியம்.
பால் பாதுகாப்பு மற்றும் ஒரு மனிதன் நாளொன்றுக்கு எவ்வளவு பால் அருந்த வேண்டும் என்பது குறித்து உணவு பாதுகாப்புத் துறையின் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலரான மருத்துவர் மாரியப்பன் அளித்துள்ள விளக்கத்தை பார்ப்போம்.
காய்ச்சாத பச்சைப் பாலினை நான்கு டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் குளிர்பதனப்பெட்டியில் வைத்து பாதுகாத்து வந்தால், இரண்டு வாரங்கள் வரை அதனைப் பயன்படுத்தலாம். கிருமி நீக்கம் செய்யப்பட்ட பால் பொட்டலத்தினை பயன்படுத்தாமல், குளிர்பதனப்பெட்டியில் வைத்திருந்தால், ஆறு முதல் ஒன்பது மாதங்கள் வரை பயன்படுத்தலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
காய்ச்சாத பால் அல்லது கிருமிநீக்கம் செய்யப்பட்ட பால் எதுவாகினும், பொட்டலத்தினைப் பிரித்து விட்டால், அதனை ஒரு வாரத்திற்குள் பயன்படுத்திவிட வேண்டும். அதுவும் குளிர் பதனப்பட்டியில் வைத்திருந்தால் மட்டுமே மேலே சொன்ன கால அளவு வரைப் பயன்படுத்தலாம். காய்ச்சாத பச்சைப் பால் அல்லது கிருமிநீக்கம் செய்யப்பட்ட பாலை, குளிர்பதனப்பெட்டியில் உறைய வைக்கலாம்.
அப்படி உறைய வைத்தால், 3 மாதங்கள் வரை அதை பயன்படுத்த இயலும். ஆனால், உறைய வைத்த பாலைத் திரும்ப இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு, முதலில் ஃப்ரீஸர் பகுதியிலிருக்கும் பாலை, குளிரூட்டப் பகுதிக்கு மாற்ற வேண்டும் (Changing from Freezer to Cold Compartment). அதில் ஒரு நாள் வைத்திருந்து, அதன் பின்னர் அறைவெப்பநிலையில் வைத்து, பாலை இயல்பு நிலைக்குக் கொண்டுவர வேண்டும். அந்தப் பாலை இரண்டு தினங்களுக்குள் பயன்படுத்தி விட வேண்டும்.
பாலை காய்ச்சி, ஆறிய பின்னர், திரும்ப குளிர்பதனப்பெட்டியில் வைத்துவிட்டால், அடுத்து ஒரு முறை மட்டுமே அதை சூடுபடுத்தி பயன்படுத்திக்கொள்ளலாம். அதற்கு மேல் பயன்படுத்தக்கூடாது. பால் கெட்டுப் போயிருக்கிறதா என்று பரிசோதிக்க, அதனை நுகர்ந்து பாருங்கள். அப்போது, ஒருவித புளிப்பு வாசம் இருந்தாலோ அல்லது பால் கட்டி இருந்தாலோ, அது கெட்டுப்போன பாலாகும். அந்தப் பாலை பயன்படுத்தக் கூடாது.
பாலினை 135 டிகிரி செல்ஸியஸ் வெப்ப நிலையில் ஒரு நிமிடம் கொதிக்க வைத்தால், கிருமிகள் அனைத்தும் இறந்துபோயிருக்கும். அதனை ஆறவைத்து, காற்றுப்புகா கொள்கலனில் பொட்டலமிட்டு அறை வெப்பநிலையில் பாதுகாத்து வந்தால், 15 நாட்கள் வரை அதனைப் பயன்படுத்தலாம். பாலினை 115 டிகிரி செல்ஸியஸ் வெப்ப நிலையில் 15 நிமிடங்கள் கொதிக்க வைத்தால் பாலில் உள்ள கிருமிகள் அனைத்தும் இறந்து போயிருக்கும்.
மேலே கூறிய இரண்டு கிருமிநீக்க முறைகளும், பால் தயாரிப்பு நிறுவனங்களுக்கு FSSAI-ஆல் சட்டத்தில் வரையறுக்கப்பட்டவையாகும். பச்சைப் பால் (Raw/Fresh Milk) வாங்குபவர்கள், இக்கிருமிநீக்க முறைகளில், ஏதேனும் ஒன்றை வீடுகளில் பின்பற்றுவது சாலச்சிறந்தது. ஒரு இயல்பான மனிதன் ஒரு நாளைக்கு 732 மில்லி லிட்டர் வரை பாலினை அருந்தலாம் என மருத்துவர் மாரியப்பன் விளக்கம் அளித்துள்ளார்.