ஓமலூரில் உலக புத்தக தினம் விழிப்புணர்வுடன் கொண்டாட்டம்
மாணவர்கள் புத்தகத்தின் முக்கியத்துவம் குறித்து பதாகையுடன் ஊர்வலம்;
உலக புத்தக தினம் கொண்டாட்டம்
ஓமலூர்: தொளசம்பட்டியில் உள்ள ஊர்புற நூலகத்தில், உலக புத்தக தின விழா நேற்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து நூலக வாசகர் வட்டம் மற்றும் அஹிம்சை சிகரம் அறக்கட்டளை ஆகியவை இணைந்து விழிப்புணர்வுப் பேரணி ஒன்றை ஏற்பாடு செய்தன. தொளசம்பட்டி பிரதான சாலை வழியாக நடைபெற்ற இப்பேரணியில், மாணவ-மாணவியர் "கைபேசியை சிறையிலிடு; புத்தகங்களைக் கையிலெடு" உள்ளிட்ட கவனத்தை ஈர்க்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். நிகழ்ச்சியின் நிறைவில், பங்கேற்பாளர்கள் சந்தை வளாகத்தில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் மரக்கன்றுகளையும் நட்டனர். இந்நிகழ்வில் நூலகர் குமார், வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் ஆர்வத்துடன் பங்கேற்று வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தினர்.