பாதையில் வீடு கட்டும் திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு
நடைபாதையில் வீடு கட்டுவதை எதிர்த்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்;
பாதையில் வீடு கட்டும் பணிக்கு எதிர்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்
சேலம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூர் ஊராட்சி கருப்பகவுண்டர் வட்டத்தில் பொது பாதையில் வீடு கட்டும் பணியை எதிர்த்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் அனைவரும் பயன்படுத்தி வரும் பொது பாதையில் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் வீடு கட்டும் பணியைத் தொடங்கியுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று சேலம்-அரூர் பிரதான சாலையில் மேட்டுப்பட்டி தாதனூர் பகுதியில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு அம்மாபேட்டை, வீராணம், காரிப்பட்டி ஆகிய பகுதிகளின் போலீசார் விரைந்து வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், போலீசார் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து மக்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.