காவிரியை கடக்க புதிய மேம்பாலம் – முதல் கட்ட பணிகள் தொடக்கம்
கோட்டையூர் – ஒட்டனூர் இடையே மேம்பாலம் திட்டம் – பரிசோதனைக்கு மண் எடுப்பு தொடக்கம்;
அணை குறுக்கே பாலம் கட்ட பரிசோதனைக்கு மண் எடுப்பு பணி தொடக்கம்
மேட்டூர் அணை குறுக்கே கோட்டையூர் மற்றும் ஒட்டனூர் கிராமங்களை இணைக்கும் வகையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் திட்டத்திற்கான முதற்கட்ட பரிசோதனைப் பணிகள் தொடங்கியுள்ளன. இப்பணியின் ஒரு பகுதியாக, அணைப் பகுதியில் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
சேலம் மாவட்டம் கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ள காவேரிபுரம் ஊராட்சியில் அமைந்துள்ள கோட்டையூர் கிராமத்தின் எல்லையில் காவிரியாறு மேட்டூர் அணையில் கலக்கிறது. அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு மேல் உயரும்போது, அப்பகுதியில் அணை நீர் தேங்கி நிற்கும். தற்போது அணையின் நீர்மட்டம் 107.53 அடியாக உள்ளது. அணையின் மறுகரையில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்தில் ஒட்டனூர் கிராமம் அமைந்துள்ளது.
இரு மாவட்டங்களில் உள்ள கோட்டையூர் மற்றும் ஒட்டனூர் கிராமங்களை இணைக்கும் வகையில் மேட்டூர் அணை குறுக்கே 2 கிலோமீட்டர் தூரத்திற்கு கனரக வாகனங்கள் செல்லும் வகையில் உயர்மட்ட பாலம் அமைக்க இரு மாவட்ட மக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தக் கோரிக்கையை ஏற்று, பா.ம.க எம்.எல்.ஏ ஜி.கே.மணி (பென்னாகரம்) மற்றும் மேட்டூர் எம்.எல்.ஏ சதாசிவம் ஆகியோர் சட்டமன்றத் தேர்தலின்போது வாக்குறுதி அளித்தனர்.
இவர்களது கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு பாலம் கட்டுவதற்கான ஆய்வுப் பணிக்கு 2022ல் 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. 2 கிலோமீட்டர் தூரம் உயர்மட்ட பாலம் கட்ட சுமார் 250 கோடி ரூபாய் செலவாகும் என தோராயமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
திட்டத்தின் முதற்கட்டமாக பரிசோதனைக்கு மண் எடுக்கும் பணி கடந்த ஏப்ரல் 11ம் தேதி தொடங்கியது. கரையில் மண் எடுக்கப்பட்ட நிலையில், நீர்ப்பரப்பு பகுதியில் மண் எடுப்பதற்காக நேற்று பேரல்களைக் கட்டி மிதவை அமைக்கும் பணி நடைபெற்றது.
இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டால், சேலம் மற்றும் தர்மபுரி மாவட்ட மக்களின் போக்குவரத்து நெடுந்தூரம் சுற்றிச் செல்லாமல் குறுகிய தூரத்தில் சென்றடைய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.