பிளாஸ்டிக், புகையிலை விற்பனை செய்யும் கடைகளுக்கு ரூ.25,000 அபராதம்
சென்னிமலையில், 8 கிலோ பிளாஸ்டிக் கவர்கள், டம்ளர்கள் பறிமுதல் செய்யப்பட்டு, தலா ரூ.500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.;
சென்னிமலையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கடைகளில் கண்காணிப்பு:
சென்னிமலை: சென்னிமலையில் நேற்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து மளிகை கடைகள், பேக்கரி, டீ ஸ்டால்கள் மற்றும் உணவகங்களில் பரிசோதனை நடத்தினர். இந்த ஆய்வில் பிளாஸ்டிக் கேரி பேக், பிளாஸ்டிக் டம்ளர், புகையிலை பொருட்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை செய்யப்பட்டது.
மொத்தம் 11 கடைகளில் சோதனை நடத்தப்பட்டதில், 4 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 8 கிலோ பிளாஸ்டிக் கவர்கள், டம்ளர்கள் பறிமுதல் செய்யப்பட்டு, தலா ரூ.500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்த கடைக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல, ஒரு கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதற்காக கடை உடனடியாக மூடப்பட்டது மற்றும் ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது.
உணவுப் பாதுகாப்பு தொடர்பான புகார்களை 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.