ஆத்தூரில் திமுக அலுவலக வாஸ்து நாளில் பூமி பூஜை
சேலம், மாவட்டம் ஆத்தூரில் புதிய அலுவலக கட்டிடத்துக்கு வாசித்த செய்ய்ய உகந்த நாளில் பூமி பூஜை;
வாஸ்து, முகூர்த்த நாளில் தி.மு.க., அலுவலகம் கட்ட பூஜை
ஆத்தூர்: வாஸ்து நாள், குரு ஓரை நேரம், முகூர்த்த நாளான நேற்று, ஆத்தூரில், தி.மு.க., கட்சியினர் நகர அலுவலகம் மற்றும் வணிக வளாகம் கட்டுவதற்கான பூமி பூஜை நடத்தினர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர், காமராஜர் சாலையில் உள்ள, ஸ்டேட் வங்கி அருகே, 1970-க்கு முன், 2,400 சதுரடி நிலம், தி.மு.க., அலுவலகத்துக்காக வாங்கப்பட்டு, அக்கட்சி தலைமை பெயரில் பதிவு செய்யப்பட்டது. அந்த இடத்தை, தனியார் கடை நடத்துவதற்கு வாடகைக்கு விடப்பட்டது. அங்கு கட்சி அலுவலகம் மற்றும் வணிக வளாகம் கட்ட வேண்டும் என உள்ளூர் தி.மு.க., கட்சியினர் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர்.
புதன்கிழமையான நேற்று, வாஸ்து மற்றும் முகூர்த்த நாள் என்பதால், தி.மு.க., அலுவலகம் மற்றும் இரு அடுக்கு கொண்ட வணிக வளாகம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. காலை 9:00 முதல் 10:00 மணி வரை, 'குரு ஓரை' நேரம் என்பதால், 9:15 மணிக்கு, செங்கல், பால மரக்கிளை வைத்து, தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி, மஞ்சள், குங்குமம், செங்கல் மீது இட்டு, பூஜை செய்யப்பட்டது.
இந்நிகழ்வில், தி.மு.க.,வின், சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம், ஆத்தூர் நகர செயலர் பாலசுப்ரமணியம், ஒன்றிய செயலர் செழியன், முன்னாள் எம்.எல்.ஏ., சின்னதுரை, மாவட்ட அவைத்தலைவர் கருணாநிதி, ஆத்தூர் நகராட்சி தலைவி நிர்மலாபபிதா, கவுன்சிலர்கள் உள்ளிட்ட கட்சியினர் கலந்துகொண்டு வழிபட்டனர். மேலும் கட்சியினரின் 'நிதி' பங்களிப்புடன், வணிக வளாகம் கட்டப்பட உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.