ஒற்றை குரங்கு சேட்டை சேலம் ஒன்றியத்தில் பரபரப்பு
பனமரத்துப்பட்டி ஒன்றிய அலுவலக வளாகத்தில், மாலை நேரத்தில் அட்டகாசம் செய்யும் குரங்கு;
பனமரத்துப்பட்டி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மாலை நேரங்களில் ஒரு ஒற்றை குரங்கு அட்டகாசம் செய்து வருகிறது. அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மீது திடீரென ஏறி, தலைமுடியை பிடித்து இழுப்பதுடன், பாக்கெட்டில் கை விட்டு பணம், பேனா போன்ற பொருட்களை எடுத்துச் செல்லும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. குரங்கை விரட்ட முயன்றவர்களை குரங்கு கைகளைப் பிடித்து கடிக்கின்றது. இதன் காரணமாக தினமும் இரண்டு முதல் மூன்று பேர் வரை குரங்கால் கடிக்கப்படுகின்றனர். குரங்கின் பல் மற்றும் நகம் தொடுவதால் ஏற்படும் காயங்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர். எனவே, இந்தக் குரங்கினை விரைந்து பிடித்து வனத்துறையினர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.