முதியவரை தாக்கி பணம் பறிக்க முயன்ற நபர் கைது

Update: 2021-01-07 09:00 GMT

தென்காசி மாவட்டத்தில் முதியவரை மிரட்டி பணம் பறிக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ ஆம்பூரில் இருந்து அம்பை செல்லும் சாலையில் அந்தோணிசாமி(86) என்பவருக்கு சொந்தமான மில் அமைந்துள்ளது. சம்பவத்தன்று மதியம் அந்தோணிசாமி அவரது மில்லில் நின்று கொண்டிருந்தபோது அங்கு அடையாளம் தெரியாத நபர் மில்லின் உள்ளே அத்துமீறி நுழைந்து அங்கு நின்று கொண்டிருந்த அந்தோணிசாமியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார். தன்னிடம் பணம் இல்லை என அந்தோணிசாமி கூறியதும் ஆத்திரமடைந்த அந்த நபர் அந்தோணிசாமியை சரமாரியாக தாக்கியுள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவும் அந்த நபர் அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார்.

இதுகுறித்து அந்தோணிசாமி கொடுத்த புகாரின் பேரில் ஆழ்வார்குறிச்சி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு மிரட்டி பணம் பறிக்க முயன்ற காக்கநல்லூர் பகுதியை சேர்ந்த அருணாச்சலம் என்பவரின் மகன் ஆறுமுகம்(45) என்ற நபர் மீது ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்து பின்னர் சிறையில் அடைத்தனர்.

Tags: