காணாமல் போன சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்பு

Update: 2021-01-02 07:30 GMT

கரூரில் ஒன்பது நாட்களுக்கு முன்பு காணாமல் போன மாற்றுத்திறனாளி சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

கரூர் மாவட்டம் கடவூர் வட்டத்திற்குட்பட்ட துலிப்பட்டி கிராமத்தில் வசிப்பவர் பசுவைலிங்கம் ஈஸ்வரி தம்பதியினர். விவசாயியான இவருக்கு 5 குழந்தைகள் உள்ளனர். இதில் ஐந்தாவது குழந்தையான செல்வம் (7) மாற்றுத்திறனாளி என தெரிய வருகிறது.கடந்த டிசம்பர் 23 ம் தேதி வீட்டிலிருந்த சிறுவன் காணாமல் போனதால் பதட்டமடைந்த சிறுவனின் பெற்றோர் சிறுவனை தேடினர். ஆனால் வெகுநேரமாகியும் எந்த தகவலும் கிடைக்காததால் பாலவிடுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில் கரூர் மாவட்டம் காமாட்சிபுரம் பகுதியில் உள்ள மாரியப்பன் என்பவரது விவசாய கிணற்றில் சடலமாக ஒரு சிறுவனின் உடல் கிடப்பதை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாலவிடுதி காவல் நிலைய போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் உடலை மீட்டு விசாரித்ததில் இறந்தது காணாமல் போன செல்வம் என தெரியவந்தது . அதன்பின் சிறுவன் உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags: