தீவுத்திடலில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சீனிவாச திருக்கல்யாணம்

14 ஆண்டுகளுக்கு பிறகு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஏப்.16-ந்தேதி தீவுத்திடலில் சீனிவாச திருக்கல்யாணம் நடக்கிறது

Update: 2022-04-03 06:18 GMT

14 ஆண்டுகளுக்கு பிறகு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வருகிற ஏப்ரல் 16-ந்தேதி பிரம்மாண்டமான முறையில் சென்னை தீவுத்திடலில் சீனிவாச திருக்கல்யாணம் நடக்கிறது.

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். கொரோனா நோய் பரவல் காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதளபாத பத்மாராதனை, நிஜபாத தரிசனம், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ரதீபலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகள் உள்ளன.

இந்த நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை திருப்பதி தேவஸ்தானத்தின் கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளூர் ஆலோசனைக் குழு தலைவர் சேகர்ரெட்டி, தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதை தொடர்ந்து சென்னை ஜி.என்.செட்டி சாலையில் நடைபெற்று வரும் பத்மாவதி தாயார் கோவில் கட்டுமான பணிகள், மின்சார வாரிய பணியை பார்வையிட்டு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தர்மாரெட்டி கூறியதாவது:

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வருகின்ற ஏப்ரல் 16ம் தேதி, பிரம்மாண்டமான முறையில் சென்னை தீவுத்திடலில் சீனிவாச திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த திருக்கல்யாணத்தை காண அதிகளவில் பக்தர்கள் வர வாய்ப்பு உள்ளது.

இதனால் பாதுகாப்பு மற்றும் இதர ஏற்பாடுகள் குறித்து தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் விரைவில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட இருக்கிறது.

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சாமி, தாயார் உற்சவ மூர்த்திகள், அர்ச்சகர்கள், வேத பண்டிதர்கள், அன்னமாச்சார்யா கலை குழுவினர் மற்றும் இதரத் துறை அதிகாரிகள் ஒருங்கிணைப்பில் இந்த திருக்கல்யாணம் நடத்தப்பட இருக்கிறது.

பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. இந்த சீனிவாச திருக்கல்யாணம் நிகழ்ச்சி 14 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தர்மாரெட்டி கூறினார்.




Similar News