அறுபடை வீடுகளுக்கு கட்டணம் இல்லாமல் ஆன்மிக சுற்றுலா: இந்த சமய அறநிலையத்துறை

தகுதியுடைய 200 விண்ணப்பதாரர்கள் முதற்கட்ட பயணத்தில் அழைத்துச் செல்லப்படுவர். விண்ணப்பத்தினை நாளை முதல் இணையத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

Update: 2024-01-10 11:53 GMT

முருகனின் அறுபடைவீடுகள்

இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று ஆணையர் அலுவலகத்தில் கோவில்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற 2,646 அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பொங்கல் கொடை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து, 10 நபர்களுக்கு ரூ.1,000/-க்கான காசோலைகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, தமிழ் கடவுள் முருக பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய திருத்தலங்களுக்கு ஒரே முறையாக பக்தர்கள் தரிசனம் செய்திடும் வகையில் ஆன்மிக சுற்றுலா ஏற்பாடு செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களிடம் கூறுகையில், முருகப்பெருமான் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவற்றிற்கு மூத்த குடிமக்கள், ஒரே முறையாக சென்று தரிசனம் செய்திட சிரமப்படுகிறார்கள் என்பதனை கருத்தில் கொண்டு, இந்த ஆறு கோவில்களுக்கும் கட்டணமில்லாமல் 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்டவர்களை அழைத்து சென்று தரிசனம் செய்து வைத்திட புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. ஆண்டிற்கு 5 முறை ஒவ்வொரு முறையும் தலா 200 நபர்கள் வீதம் மொத்தம் 1,000 பக்தர்களை அழைத்து சென்று தரிசனம் செய்து வைத்திட இந்து சமய அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது.

அதன்படி, முதற்கட்ட அறுபடை வீடு ஆன்மிக சுற்றுப்பயணம் வருகிற 28ம் தேதி அன்று தொடங்க இருக்கின்றது. இதற்கான விண்ணப்பத்தினை நாளை முதல் துறையில் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

தகுதியுடைய 200 விண்ணப்பதாரர்கள் முதற்கட்ட பயணத்தில் அழைத்துச் செல்லப்படுவர். ஏனைய தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அடுத்தடுத்த ஆன்மிக பயணங்களில் அழைத்து செல்ல முன்னுரிமை வழங்கப்படும் என கூறினார்.

Tags:    

Similar News