சமயபுரம் மாரியம்மனின் தங்கையாக கருதப்படும் மணப்பாறை மாரியம்மன்

வேப்பிலை மணக்க பாறையில் பிறந்தவள் என்பதால் ஊரின் பெயர் மணப்பாறை ஆகிவிட்டது.

Update: 2021-06-09 05:08 GMT

மணப்பாறை மாரியம்மன் கோவில் 

சமயபுரம் மாரியம்மனின் தங்கையாக கருதப்படும் மணப்பாறை மாரியம்மன், வேப்பிலை மணக்க பாறையில் பிறந்தவள் என்பதால் ஊரின் பெயர் மணப்பாறை ஆகிவிட்டது.

கல்லில் நீண்ட காலமாக உயிர் கொண்டிருந்த மாரியம்மன் திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை என்ற ஊரில் அமைந்துள்ளது.


முன்னொரு காலத்தில் இந்த மாரியம்மன் கோவில் உள்ள இடம் மூங்கில் மரங்கள் மற்றும் வேப்ப மரங்கள் நிறைந்த காடுகளாக இருந்தன. மூங்கில் மரங்களை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது அப்பகுதியினர் வானுயர்ந்த மூங்கில் மரங்களை வெட்டினர். அச்சமயத்தில் வேப்பமரம் ஒன்றை வேருடன் சாய்த்தனர். அப்போது அந்த வேப்ப மரத்தின் அடியில் கல் ஒன்று புதைந்து இருந்தது.

கல்லைப் பெயர்த்தெடுக்க முயன்ற போது, கடப்பாறை முனை பட்டதும், கல்லுக்குள் இருந்து ரத்தம் கசிந்தது. அதிர்ந்துபோன மக்கள் அலறியடித்து ஓடி, ஊர் பெரியவர்களை அழைத்து வந்தனர். அப்போது ஒருவருக்கு அருள்வந்து, தான் மகமாயி என்றும், இந்த வேப்ப மரத்தடியில் கிடந்த கல்லில் நீண்ட காலமாக குடிகொண்டு இருந்ததாகவும், தனக்கு கோவில் கட்டி வணங்கினால், அனைவரையும் காத்து அருள்பாலிப்பதாகவும் கூறியது.

பக்தர்கள் அந்தக் கல்லை சில காலமாக கர்ப்பகிரகத்தில் வைத்து வழிபட்டு வந்தனர். பிறகு அம்மனுக்கு சிலை வடிக்கப்பட்டது. இருப்பினும் கர்ப்பக்கிரகத்தில் புனிதக்கல் இன்றும் உள்ளது. சமயபுரம் மாரியம்மனின் தங்கையாக கருதப்படும் இந்த மணப்பாறை மாரியம்மன் காவிரியின் தெற்கு கரையிலும், சமயபுரம் வடகரையிலும் அமைந்திருப்பது மிகச் சிறப்பாகும்.

இங்கு தமிழ் வருடப்பிறப்பன்று திருவிளக்கு பூஜையும், சித்திரை 2ம் தேதி பால்குடமும் எடுக்கப்படுகிறது. வேப்பமரத்தடியில் புனிதக்கல் கிடைத்ததால், வேப்பிலை மாரியம்மன் என்ற பெயர் சூட்டப்பட்டது. வேப்பிலை மணக்க பாறையில் பிறந்தவள் என்பதால் ஊரின் பெயர் மணப்பாறை ஆகிவிட்டது.

விவசாயம் செழிக்க மழை வேண்டி அருள பக்தர்கள் பால்குடம் எடுக்கின்றனர். திருமணம் காலதாமதம் ஏற்படுபவர்கள் இங்கு உள்ள வேப்பில்லை மாரியம்மன் சன்னதியில் மஞ்சள் கயிறு ஒன்றை வாங்கி அம்மன் சன்னதியின் பின்புறம் உள்ள வேப்பமரத்தில் கட்டினால் திருமணம் விரைவில் கைகூடும். குழந்தைப்பேறு கிடைக்க இங்குள்ள மரத்தில் வளையல் கட்டி பிரார்த்தனை செய்து கொள்கின்றனர். நோய்களிலிருந்து விடுபட மற்றும் கல்வி முன்னேற்றத்திற்கும், நீண்ட ஆயுள் கிடைக்கவும் இந்த அம்மனை பிரார்த்தனை செய்து கொண்டு பால்குடம் எடுக்கின்றனர்.

மூலவர் : மாரியம்மன்

பழமை : சுமார் 500 வருடங்களுக்குள்

ஊர் : மணப்பாறை

மாவட்டம் : திருச்சி

Tags:    

Similar News