பங்கு சந்தை வீழ்ச்சி: முதலீட்டாளர்களுக்கு ரூ.14 லட்சம் கோடி நஷ்டம்

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 2,042 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது

Update: 2022-05-13 13:32 GMT

இந்திய பங்குச் சந்தைகளில் திங்கள் முதல் வெள்ளி வரை 5 தினங்களிலும் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு வீழ்ச்சி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்காவின் பணவீக்கம், கடந்த ஏப்ரல் மாதத்தில் நம் நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு இன்று வர்த்தகம் நிறைவடைந்தபோது ரூ.241.34 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த வார வெள்ளிக்கிழமையன்று (மே 6) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.255.17 லட்சம் கோடியாக இருந்தது.


கடந்த வாரத்தை ஒப்பிடுகையில், இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.13.83 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

இந்திய பங்குச் சந்தைகளில், இன்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,041.96 புள்ளிகள் குறைந்து 52,793.62 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 629.10 புள்ளிகள் சரிந்து 15,782.15 புள்ளிகளில் முடிவுற்றது.

இது 2020 க்குப் பிறகு மிக அதிகமான வாராந்திர இழப்பு

Tags:    

Similar News