தொடர்ந்து 2வது நாளாக இந்திய பங்குச் சந்தைகளில் சரிவு

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 106 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது.

Update: 2022-05-10 11:10 GMT

பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து நாடுகளின் மத்திய வங்கிகள் தொடர்ந்து கடுமையான நிதி கொள்கையை கடைப்பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு, முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது.

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் உள்பட மொத்தம் 12 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டாடா ஸ்டீல் மற்றும் சன்பார்மா உள்பட மொத்தம் 18 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 881 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,473 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 133 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.248.23 லட்சம் கோடியாக குறைந்தது. இன்று பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.3.68 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 105.82 புள்ளிகள் குறைந்து 54,364.85 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 61.80 புள்ளிகள் சரிந்து 16,240.05 புள்ளிகளில் முடிவுற்றது.

Tags:    

Similar News