பெட்ரோல் வாகனங்களை நாடும் உணவு டெலிவரி கம்பெனிகள்

எலெக்ட்ரிக் டூ வீலர் முழு சார்ஜில் 140 முதல் 180 கிமீ வரை சென்றாலும் மீண்டும் முழுவதும் சார்ஜ் செய்யப்பட 4 மணி நேரம் வரை ஆவதாக கூறுகின்றன.

Update: 2024-02-22 12:37 GMT

சொமேட்டோ, ஸ்விக்கி போன்ற உணவு டெலிவரி நிறுவனங்கள் மற்றும் மளிகைப் பொருட்களை விற்பனை செய்யும் க்யூ காமர்ஸ் நிறுவனங்களுக்கு கிடைக்கும் ஆர்டர்களில் பெரும்பாலானவை உட னடி டெலிவரிக்கான ஆர்டர்களாகவே உள்ளன. இந்நிலையில், இவற்றை டெலிவரி செய்வதற்கு எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வருவதாக ஆன்லைன் நிறுவனங்கள் கூறியுள்ளன.

எலெக்ட்ரிக் டூ வீலர் ஒரு முறை முழுவதும் சார்ஜ் செய்யப்பட்டால் 140 முதல் 180 கிலோ மீட்டர் வரை செல்கின்றன என்று கூறும் இந்த நிறுவனங்கள், மீண்டும் முழுவதும் சார்ஜ் செய்யப்பட 4 மணி நேரம் வரை ஆவதாக கூறுகின்றன.

உடனடி டெலிவரிக்கான ஆர்டர்கள் நகரங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருவதால் டெலிவரி வாகனங்கள் தொடர்ந்து இயங்க வேண்டியுள்ளன. இவை சார்ஜ் செய்வதற்காக நிறுத்தப்படக்கூட நேரமில்லை.

குறிப்பாக காலை 6 மணி முதல் 11 மணி வரையும், பகல் 12 மணி முதல் 3 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் ஆர்டர்கள் தங்களுக்கு அதிக அளவில் கிடைப்பதாகக் கூறும் இந்த நிறுவனங்கள், இவற்றை எலெக்ட்ரிக் வாகனங்கள் மூலம் டெலிவரி செய்வது இயலாததாக உள்ளது என்று கூறுகின்றன.

பெட்ரோல் வாகனங்கள் மூலம் டெலிவரி செய்யப்படும் போது அவை ஆங்காங்கே உள்ள பங்குகளில் பெட்ரோல் நிரப்பிக் கொள்ள முடியும் என்பதால் இவை தொடர்ந்து 600 கிலோமீட்டர் தூரம் வரை செல்ல முடிகிறது.

சிறிய நகரங்களில் கூட தற்போது நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு நிறுவனத்துக்கும் 300க்கும் அதிகமான ஆர்டர்கள் கிடைக்கின்றன. ஒவ்வொரு ஆர்டருக்கும் சராசரியாக 10 கிலோமீட்டர் தூரம் என வைத்துக் கொண்டால் கூட மொத்தமாக 3 ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமாக பயணம் செய்ய வேண்டியிருக்கும்.

உணவுக்கான ஆர்டர்கள் உடனடியாக டெலிவரி செய்யப்பட வேண்டும். இதற்காக வாகனங்கள் உணவு நிறுவனங்களும் ஆர்டர்கள் அளித்தவர்களின் இடங்களுக்கும் மாறி மாறி செல்ல வேண்டியிருக்கும். இதனால் பயண தூரம் கூடும்.

ஒரு நிறுவனத்தின் வசம் 30 வாகனங்கள் இருந்தாலும் கூட ஒவ்வொரு வாகனமும் சராசரியாக 200 கிலோ மீட்டர் தூரம் வரை செல்ல வேண்டியிருக்கும். மேலும் குறித்த நேரத்தில் டெலிவரி செய்ய வேண்டும் என்பதால் எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதற்காக மணிக்கணக்கில் நிறுத்தி வைக்க முடியாது. சில சமயங்களில் சார்ஜிங் நிலையங்களில் தங்கள் முறை வரும் வரை காத்திருக்கவும் வேண்டியுள்ளது.

இதனால் கால தாமதம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விட்ட நிலையில் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவது பயனற்றதாகி வருவதாக நிறுவனங்கள் கூறியுள்ளன.

அனைத்து டெலிவரியையும் எலெக்ட்ரிக் வாகனங்கள் மூலமாக செய்ய வேண்டுமானால் கூடுதல் வாகனங்கள் மற்றும் கூடுதல் ஊழியர்கள் தேவை. இது அதிக செலவு பிடிக்கும் என்பதால் இந்த நிறுவனங்கள் தற்போது மீண்டும் பழையபடி செய்கின்றன. பெட்ரோல் வாகனங்கள் மூலமே டெலிவரி செய்கின்றன

Tags:    

Similar News